
உலகிலேயே முதல் முறையாக ரோபோ ஊழியர் தன்னை தானே மாய்த்துக் கொள்ளும் சம்பவம் தென்கொரியாவில் நடந்துள்ளது. இதனை முதல் ‘ரோபோ தற்கொலை’ என விவரிக்கிறார்கள்.
தென்கொரியாவின் குமி சிட்டி கவுன்சிலில் ஒரு அங்கமாக இருக்கும் ‘ரோபோ கண்காணிப்பாளர்’ அந்த கட்டடத்தின் முதல் மற்றும் இரண்டாம் மாடிக்கிடையில் உள்ள படிக்கட்டில் விழுந்து செயலிழப்புக்குள்ளாகியுள்ளது. இந்த நிகழ்வுக்கு முன்பாக ரோபோ ஒரே இடத்தில் எதையோ தேடுவதை போல வட்டமடித்துக் கொண்டிருந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.
கலிபோர்னியா பியர் ரோபோட்டிக்ஸ் என்கிற நிறுவனம் உருவாக்கிய இந்த செயற்கை மனிதன் (ரோபோ) 2023-ம் ஆண்டு முதல் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரிடத்திலிருந்து கோப்புகளை இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதும் மக்களுக்கு யாரை பார்க்க வேண்டும் என வழிகாட்டுவதுமாக பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தது இந்த ரோபோ.
ரோபோ ஒரு தளத்தில் செயலாற்றும் வகையில் இல்லாமல் தானாகவே லிஃப்ட் அழைத்து அடுத்த தளத்துக்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த விபத்து நிகழ வாய்ப்பே இல்லை எனக் கூறப்படுகிறது.
அலுவலக பணி சார்ந்த அழுத்தம் மனிதர்களுக்கு மட்டுமில்லாமல் செயற்கை ரோபோக்களுக்கும் ஏற்பட்டிருக்குமோ என்கிற ரீதியில் சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்படுகின்றன.
தற்போதைக்கு இன்னொரு ரோபோவை நியமிக்கும் எண்ணமில்லை என கவுன்சில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தென்கொரியாவில் 10 ஊழியர்களுக்கு ஒரு தொழில்துறை ரோபோ என்கிற கணக்கில் உள்ளதாக பன்னாட்டு ரோபோட்டிக்ஸ் பேரமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வின் காரணம் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.