நேபாளத்தில் இன்று அதிகாலை நேரிட்ட நிலச்சரிவில், சுமார் 65 பயணிகளுடன் சென்ற இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தில், தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, திரிசூலி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், நிலச்சரிவு நேரிட்டு, இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த பேருந்துகளில் 7 இந்தியர்கள் உள்பட 65 பயணிகள் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலச்சரிவு நேரிட்ட இடத்தில் மண் சரிவுகளை அகற்றும் பணியும், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில், படகுகளில் சென்று பயணிகளை தேடும் பணியிலும் பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

-
நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, திரிசூலி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக, மதன் - ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில், சாலையில் சென்றுகொண்டிருந்த இரண்டுப் பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு, சாலையின் பெரும்பகுதி ஆற்றில் வெள்ளப்பெருக்குடன் அடித்துச் செல்லப்பட்டபோது, சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்துகளும் ஆற்றில் விபந்ததாகக் கூறப்படுகிறது.
பேருந்து ஓட்டுநர்கள் உள்பட இரண்டு பேருந்துகளிலும் 65 பயணிகள் இருந்துள்ளனர். பேருந்தில் இருந்த பயணிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நிலச்சரிவு நேரிட்ட இடம்
நேபாளத்தில் இரண்டு பேருந்துகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்துக்கு அந்நாட்டுப் பிரதமர் புஷ்ப கமல் தஹால் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க, அரசின் அனைத்துத் துறைகளுக்கும் உத்தரவிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, காத்மாண்டு - பரத்பூர் மற்றும் சித்வான் பகுதிகளுக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நேபாளத்தில் பருவமழை தொடங்கி கடந்த 4 வாரங்களில் மட்டும் மழை மற்றும் அது தொடர்பான சம்பவங்களில் 74 பேர் பலியாகியுள்ளனர். 80 பேர் காயமடைந்துள்ளனர். பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மின்னல் தாக்குவது போன்ற நிகழ்வுகளே காரணமாக இருந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










