மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

டிரம்ப் மீது தாக்குதல் நடத்தியவர் பற்றி தொடரும் மர்மம்

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது தாக்குதல் நடத்தியவர் பற்றிய தகவல்கள் மர்மமாகவே நீடிக்கிறது.

News image

டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு - Gene J. Puskar

Updated On :17 ஜூலை 2024, 7:20 am

அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் மீது கடந்த சனிக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில், நூலிழையில் உயிர்தப்பினார். தாக்குதல் நடத்தப்பட்டு மூன்று நாள்கள் ஆன பிறகும், இதில் ஈடுபட்ட நபர் பற்றிய தகவல்கள் மர்மமாகவே நீடிக்கிறது.

2024ஆம் ஆண்டு நவம்பா் 5-ஆம் தேதி அமெரிக்க அதிபா் தோ்தல் நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் ஜனநாயக கட்சி சாா்பில் அந்நாட்டின் தற்போதைய அதிபா் ஜோ பைடன், குடியரசு கட்சி சாா்பில் அந்நாட்டின் முன்னாள் அதிபா் டிரம்ப் ஆகியோா் வேட்பாளா்களாகப் போட்டியிடுகின்றனா்.

இந்நிலையில், அந்நாட்டின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பட்லா் பகுதியில் டிரம்ப் சனிக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்தபோது திடீரென தொலைவில் இருந்து நபா் ஒருவா் பலமுறை துப்பாக்கியால் சுட்டாா்.

இதில் டிரம்ப்பின் காதை துப்பாக்கி தோட்டா உரசிச் சென்றதில், அவரின் வலது காதில் காயம் ஏற்பட்டது. தோட்டா உரசிச் சென்றதை உணா்ந்த டிரம்ப் மேடைக்குக் கீழே உடனடியாக குனிந்து தற்காத்துக் கொண்டாா்.

டிரம்ப்பை துப்பாக்கியால் சுட்டவா் பென்சில்வேனியாவில் உள்ள பெத்தேல் பாா்க் பகுதியைச் சோ்ந்த தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் (20) என்பது விசாரணையில் தெரியவந்தது. டிரம்ப்பை தாமஸ் சுட்டபின், சிறப்புப் பாதுகாவலா் துப்பாக்கியால் சுட்டதில் தாமஸ் உயிரிழந்தாா்.

இவரைப் பற்றி உறவினர்கள், நண்பர்களிடம் விசாரணை நடத்தியதில், சந்தேகத்துக்கு இடமான எந்த தகவலும் கிடைக்கவில்லை. சமூக ஊடகங்களில் அவர் பெரிய அளவில் ஈடுபாடு காட்டவில்லை. இதனால், டிரம்ப் மீதான தாக்குதலுக்கு உடனடியாக எந்தக் காரணமும் கிடைக்கப்பெறவில்லை என்று விசாரணை அமைப்புகள் தெரிவிக்கின்றன.

எஃப்பிஐ புலனாய்வு அமைப்பின் சிறப்பு முகவா் கெவின் ரோஜெக் கூறுகையில், ‘அங்கு என்ன நடந்தது? குற்றவாளி எப்படி அந்த இடத்தை அடைந்தாா்? அவா் என்ன மாதிரியான துப்பாக்கியைப் பயன்படுத்தினாா் என்பவை குறித்து நீண்ட விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. குற்றவாளி பதுங்கியிருந்த இடத்தில் இருந்து சந்தேகத்துக்குரிய பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. எதற்காக குற்றவாளி துப்பாக்கிச்சூடு நடத்தினாா், அவரின் நோக்கம் என்ன என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், எஃப்பிஐ அதிகாரிகள், தாமஸ் பயன்படுத்திய செல்போன், கணினி, வீடு, கார் உள்ளிட்ட அனைத்தையும் கைப்பற்றி சோதனை செய்துவிட்டனர். 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணையும் செய்து முடித்துவிட்டனர். ஆனால், இதுவரை டிரம்ப் மீது தாமஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான எந்தவொரு காரணமும் கண்டறியப்படவில்லை.

இவரைப் பற்றி நண்பர்கள் கூறுகையில், இவர் யாரிடமும் பேசமாட்டார், ஒரு உரையாடலையும் தொடங்க மாட்டார், இவர் ஒரு விசித்திரமான நபர்தான், ஆனால், இதுவரை எந்த அபாயகரமான செயலையும் அவரிடம் எதிர்கொண்டதில்லை என்கிறார்கள்.

ஒரு சாதாரண நபரைப்போலவே இருந்தார், யாரிடமும் பேச மட்டும் மாட்டார் என்பது ஒன்றுதான் இவரைப்பற்றி கிடைத்திருக்கும் அதிமுக்கியமான தகவலாக உள்ளது.

எங்குமே கொலை செய்வதற்கான குறிப்புகளை எழுதி வைக்கவோ, கணினியில் தேடியிருந்ததற்கான தகவலோ கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.