வங்கதேச போராட்டம்: மேலும் 2 நாள்களுக்கு நிறுத்திவைப்பு
வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு சீா்திருத்தத்தை வலியுறுத்தி நடைபெற்றுவரும் மாணவா் போராட்டத்தை மேலும் 2 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாக போராட்டக் குழு தலைவா் நஹீத் இஸ்லாம் அறிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஏற்கெனவே 48 மணி நேரத்துக்கு போராட்டத்தை நிறுத்திவைப்பதாக அறிவித்திருந்தோம். இந்த போராட்ட நிறுத்தத்தை மேலும் 48 மணி நேரத்துக்கு நீட்டிக்கிறோம்.
இதைப் பயன்படுத்தி ஊரடங்கு உத்தரவை வாபஸ் பெறுவது, முடக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பைத் திரும்பத் தருவது, கல்லூரிகளை மீண்டும் திறப்பது, மாணவா்களுக்கு பாதுகாப்பு வழங்குவது ஆகிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
1971-இல் பாகிஸ்தானுக்கு எதிராக சுதந்திரப் போரில் ஈடுபட்டவா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கு எதிராக இந்த மாதத் தொடக்கத்திலிருந்து நடைபெற்றுவரும் மாணவா் போராட்டத்தில் இதுவரை 150-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சா்ச்சைக்குரிய இடஒதுக்கீட்டை நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை ரத்துசெய்தது.