அமெரிக்காவைச் சேர்ந்த கூடைப்பந்தாட்ட முன்னாள் வீரரும் நடிகருமான ரஷித் பைர்ட்-க்கு 90 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்குத் தொடர் பாலியல் வன்கொடுமை அளித்த விவகாரத்தில் ரஷித் பைர்ட்டுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரஷித் பைர்ட். சர்வதேச கிளப்களின் கூடைப்பந்தாட்ட வீரரான இவர், நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ளார்.
லாஸ் ஏஞ்சலீஸ் லேக்கர்ஸ், சாக்ரமென்டோ கிங்ஸ் ஆகிய இரு சர்வதேச கிளப்களுக்காக விளையாடியுள்ளார். லேக்கர்ஸ் அணிக்காக 2008 - 2009 ஆண்டில் மட்டும் 19 முறை விளையாடியுள்ளார்.
தனது புகழ் வெளிச்சத்தை பயன்படுத்தி பெண்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வழக்கில் கடந்த 2020ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலீஸ் காவல் துறையினர் ரஷித்தை கைது செய்தனர். கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
இது தொடர்பாக பேசிய லாஸ் ஏஞ்சலீஸ் காவல் துறையைச் சேர்ந்த தலைமை விசாரணை அதிகாரி தாரா பிரெளன், சினிமா - விளையாட்டுத் துறை புகழைப் பயன்படுத்தி பிரபலமாக இருந்துவந்த ரஷித் பைர்ட் மீது நாளடைவில் அதிக எண்ணிக்கையிலான பாலியல் புகார்கள் எழுந்துவந்தன. தற்போது அதற்கு முடிவு கிடைத்துள்ளது. தவறுகளை இழைத்த ரஷித், இனி சுந்தந்திரமாக சுற்ற முடியாது. தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை தைரியத்துடன் பகிர்ந்த பெண்களுக்கு காவல் துறை பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இதற்கு முன்பு கடந்த 2010ஆம் ஆண்டு ரஷித் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்பு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக 2005ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.