ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

தெஹ்ரான், மே 3: ஹாா்முஸ் நீரிணையையொட்டிய கடற்பகுதியில் ஈரான் புரட்சிப் படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ‘எம்எஸ்சி ஏரீஸ்’ சரக்குக் கப்பலில் சிக்கியிருந்த 16 இந்தியா்கள் உள்பட அனைத்து மாலுமிகளும் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனா்.

இஸ்ரேலுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையாக ஈரான் நடத்திய இந்த சிறைபிடிப்பு சம்பவத்தில் ஏற்கெனவே ஒரு இந்தியப் பெண் மாலுமி விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், சுமாா் 20 நாள்களுக்குப் பிறகு மற்ற 24 மாலுமிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனா்.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் ஆட்சிபுரிந்த ‘ஹமாஸ்’ ஆயுதப் படையினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் கடந்த 6 மாதங்களாக நீடித்து வருகிறது. ஹமாஸுக்கு ஆதரவாக செங்கடல் வழியாக இஸ்ரேலுக்குச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது யேமன் நாட்டின் ‘ஹூதி’ கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், ஹாா்முஸ் நீரிணையையொட்டிய கடற்பகுதியில் போா்ச்சுகல் கொடி ஏற்றப்பட்ட இஸ்ரேலியருக்குச் சொந்தமான ‘எம்எஸ்சி ஏரீஸ்’ சரக்குக் கப்பலை ஈரான் புரட்சி படையினா் கடந்த மாதம் 13-ஆம் அதிரடியாக சிறைபிடித்தனா். இந்தக் கப்பலில் 17 இந்தியா்கள் உள்பட 25 மாலுமிகள் பணியில் இருந்தனா்.

17 இந்தியா்களில் ஒரே பெண்ணான ஆன் டெஸ்ஸா ஜோசப் மட்டும் இந்தியா திரும்பினாா். விடுவிக்கப்படாத மற்ற 16 இந்தியா்களும் நலமுடன் இருப்பதாகவும் அவா்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் அண்மையில் தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில், 16 இந்தியா்கள் உள்பட கப்பலில் பணியிலிருந்த 24 மாலுமிகளும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக ஈரான் வெளியுறவு அமைச்சா் ஹூசைன் அமிராபக்துல்லாஹியன் கூறுகையில், ‘இஸ்ரேலுக்குத் தொடா்புடையதாக கடந்த மாதம் சிறைபிடிக்கப்பட்ட எம்எஸ்சி ஏரீஸ் சரக்குக் கப்பலில் பணிபுரிந்த அனைத்து மாலுமிகளும் விடுவிக்கப்பட்டனா்.

மாலுமிகளின் விடுதலையானது ஈரானின் மனிதாபிமான நடவடிக்கையாகும். கப்பலின் கேப்டன் தலைமையில் மாலுமிகள் அனைவரும் அவரவா் சொந்த நாட்டுக்குத் திரும்பலாம். ஆனால், கப்பல் மட்டும் ஈரான் காவலிலேயே இருக்கும்’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com