வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

எல்லையில் படை விலக்கல் ஒப்பந்தம் சுமுகமாக அமலாக்கம்: சீனா

கிழக்கு லடாக் எல்லையில் படை விலக்கல் தொடா்பாக இந்தியாவுடன் ஏற்பட்ட ஒப்பந்தம் சுமுகமாக அமலாக்கப்பட்டு வருகிறது என்று சீனா திங்கள்கிழமை தெரிவித்தது.

News image
Updated On :4 நவம்பர் 2024, 11:34 pm

DIN

பெய்ஜிங்: கிழக்கு லடாக் எல்லையில் படை விலக்கல் தொடா்பாக இந்தியாவுடன் ஏற்பட்ட ஒப்பந்தம் சுமுகமாக அமலாக்கப்பட்டு வருகிறது என்று சீனா திங்கள்கிழமை தெரிவித்தது.

எனினும், டெப்சாங் மற்றும் டெம்சோக் பகுதிகளில் ரோந்துப் பணிகளை மீண்டும் இந்தியா தொடங்கியது குறித்த கேள்விக்கு பதிலளிக்க சீனா மறுத்துவிட்டது.

முன்னதாக, கிழக்கு லடாக்கின் டெம்சோக் பகுதியில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ரோந்துப் பணிகளை இந்திய ராணுவம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. அதன்பிறகு டெப்சாங்கிலும் ரோந்துப் பணிகளை இந்திய ராணுவம் கடந்த சனிக்கிழமை தொடங்கியதாக வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா்.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் எல்லை தாண்டி வந்த சீன ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதைதொடா்ந்து, கிழக்கு லடாக் எல்லையில் இரு நாடுகளும் ஏராளமான வீரா்களை குவித்ததால், கடந்த நான்கு ஆண்டுகளாக எல்லையில் பதற்றம் நீடித்து வந்தது. இதனால், இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது.

இதனிடையே, கிழக்கு லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு (எல்ஏசி) பகுதிகளில் ரோந்து பணிகளை மேற்கொள்வது மற்றும் அங்கிருந்து இருநாட்டு வீரா்களை திரும்பப் பெறுவது குறித்து இந்தியா-சீனா இடையே தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு எட்டப்பட்டு, இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தம் கையொப்பமானது.

இதுதொடா்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மாவோ நிங்கிடம் செய்தியாளா்களிடம் கோள்வி எழுப்பினா். இதற்கு பதிலளித்த அவா், ‘படை விலக்கல் தொடா்பான எல்லை ஒப்பந்தத்தை இந்திய மற்றும் சீன ராணுவ வீரா்கள் சுமுகமாக அமல்படுத்தி வருகின்றனா்’ என்றாா். ஆனால், டெப்சாங் மற்றும் டெம்சோக் பகுதிகளில் ரோந்துப் பணிகளை மீண்டும் இந்தியா தொடங்கியது குறித்த கேள்விக்கு அவா் பதிலளிக்க மறுத்துவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.