லெபனானில் நடத்தப்பட்டத் தாக்குதல்களைத் தொடர்ந்து தங்களது நிறுவன விமானங்களில் பயணிக்கும் பயணிகள் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் எடுத்துச் செல்ல எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் தடை விதித்துள்ளது.
’துபையிலிருந்து அல்லது துபை வழியாக செல்லும் விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகளைத் தங்களுடன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுகிறது' என துபையைச் சேர்ந்த விமான சேவை நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
சில நாள்களுக்கு முன்பு லெபனான் மற்றும் சிரியாவில் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் போன்ற தொலை தொடர்பு சாதனங்கள் திடீரென வெடித்துச் சிதறியது. இதில், ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த 37 பேர் உயிரிழந்து 3,000 பேர் வரை காயமடைந்தனர். இந்தத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், “தடை செய்யப்பட்ட இந்தப் பொருள்கள் பயணிகளின் கைப்பைகள், உடைமைகளில் இருப்பது கண்டறியப்பட்டால் அவை துபை காவல்துறையால் பறிமுதல் செய்யப்படும்” என்றும் கூறியுள்ளது.
மத்தியக் கிழக்குப் பகுதியின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான எமிரேட்ஸ், ஈரான் மற்றும் ஈராக் வழித்தடத்தில் செல்லும் விமானங்கள் வருகிற செவ்வாய் (அக்டோபர் 8) வரை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
ஈரான் மற்றும் ஈராக் மீது ஏவுகணைகள் பறந்ததைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. எனவே, தனது விமான சேவைகளை சில நாள்களுக்கு அந்தப் பகுதிகளில் நிறுத்தி வைப்பதாக எமிரேட்ஸ் அறிவித்தது.
லெபனான் தலைநகரில் விமான நிலையத்திற்கு அருகிலேயே இஸ்ரேல் தாக்குதல்கள் நடத்தியதால் அங்கும் விமானப் போக்குவரத்தை நிறுத்தி வைத்த எமிரேட்ஸ் நிறுவனம், மீண்டும் சேவையை அக். 15 அன்று தொடங்கவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.