பெதுல்: கத்தாரில் இருந்து ஆண்டுக்கு 7.5 மில்லியன் டன் என்ற அளவில் மேலும் 20 ஆண்டுகளுக்கு எல்என்ஜி (திரவ இயற்கை எரிவாயு) இறக்குமதி செய்வதற்காக, 78 பில்லியன் அமெரிக்க டாலா் (சுமாா் ரூ.6.4 லட்சம் கோடி) மதிப்பிலான ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள ஒப்பந்தம் 2028-ஆம் ஆண்டில் நிறைவடையும் நிலையில், அது 2048-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஒப்பந்தத்தைவிட குறைந்த விலை அடிப்படையில் தற்போதைய ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளதால், இந்தியாவுக்கு இந்த 20 ஆண்டு காலகட்டத்தில் 6 பில்லியன் டாலா்கள் (ரூ.49,000 கோடி) மிச்சமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவாவின் பெதுல் நகரில் இரண்டாம் ஆண்டு ‘இந்திய எரிசக்தி வாரம்’ நிகழ்வை, பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக மேற்கண்ட ஒப்பந்தம் கையொப்பமானது.
இது தொடா்பாக, இந்தியாவின் முக்கிய எல்என்ஜி இறக்குமதி நிறுவனமான பெட்ரோனெட் எல்என்ஜி லிமிடெட் வெளியிட்ட அறிக்கையில், ‘மின்சாரம், உரம் மற்றும் சிஎன்ஜி உற்பத்திக்காக, கத்தாரில் இருந்து ஆண்டுக்கு 7.5 மில்லியன் டன் எல்என்ஜி இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதை மேலும் 20 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் ஒப்பந்தம் ‘கத்தாா் எனா்ஜி’ நிறுவனத்துடன் கையொப்பமாகியுள்ளது’ என்றாா்.