இஸ்ரேல், காஸாவில் மேற்கொண்டுவரும் போர் நடவடிக்கைகளின் தீவிரத்தைக் குறைக்குமாறும் போருக்குப் பின்னர் பாலஸ்தீன அரசு அமைய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமெரிக்கா முன்வைத்த அழைப்புகளை நிராகரித்துள்ளார் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.
இரு நட்பு நாடுகளிடையே விரிவடைந்துவரும் போரின் போக்கு மற்றும் எதிர்கால திட்டம் குறித்து கருத்து முரண் நிலவி வருகிறது.
அமெரிக்க வெளியுறவு செயலர் ஆண்டனி பிளிங்கன், பாலஸ்தீன சுதந்திர அரசு அமையவில்லையெனில் இஸ்ரேல் தனது பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது எனக் குறிப்பிட்டார்.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் அமெரிக்கா, இஸ்ரேல் தந்து போர் நடவடிக்கைகளின் தீவிரத்தை குறைக்க இது சரியான நேரம் எனத் தெரிவித்தது.
இந்த நிலையில் நெதன்யாகு, கருத்துகளை எதிர்க்கும் தொனியில், இஸ்ரேல் தனது இலக்குகளான ஹமாஸை முற்றிலும் அழிப்பது மற்றும் பிணைக்கைதிகளை மீட்பது ஆகியவற்றை முழுமையாக எட்டாமல் போரை நிறுத்தாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
வலதுசார்பு அரசை தலைமையேற்று நடத்திவரும் நெதன்யாகு, நீண்டகாலமாக பாலஸ்தீனத்தின் இரு-நாடு கொள்கையை எதிர்த்து வருகிறார்.
அவர், “ஜோர்டான் ஆற்றுக்கு மேற்கே உள்ள பிராந்தியம் முழுவதுக்குமான பாதுகாப்பை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். இது இறையாண்மையின் கருத்துக்கு எதிரானதுதான். ஆனால் என்ன செய்ய இயலும்? அமெரிக்க நண்பர்களுக்கு இந்த உண்மையைத் தெரியப்படுத்துகிறேன். இஸ்ரேலை வற்புறுத்தும் இந்த முயற்சி, இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு உடனடியான எதிர்வினை அமெரிக்காவின் தரப்பிலிருந்து வெளிவந்துள்ளது. இரு நாட்டு கொள்கையை நிறைவேற்றும் அமெரிக்க அதிபரின் முயற்சி தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.