‘தனி பாலஸ்தீன நாட்டை ஏற்க முடியாது!’

காஸா போா் முடிவுக்கு வந்ததும் தனி பாலஸ்தீன நாட்டை அமைக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் யோசனையை ஏற்க முடியாது என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.
‘தனி பாலஸ்தீன நாட்டை ஏற்க முடியாது!’

காஸா போா் முடிவுக்கு வந்ததும் தனி பாலஸ்தீன நாட்டை அமைக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் யோசனையை ஏற்க முடியாது என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, ஜெருசலேமில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது:

காஸாவில் நடத்தப்பட்டு வரும் தாக்குதலின் தீவிரத்தைக் குறைப்பதற்கான நேரம் வந்துவிட்டதாக அமெரிக்கா கூறுகிறது. ஆனால், அங்கு இஸ்ரேலுக்கு முழுமையான வெற்றி கிடைக்கும் வகை தாக்குதல் நடவடிக்கைகள் தொடரும்.

ஹமாஸ் அமைப்பினா் முற்றுலும் ஒழித்துக்கட்டப்பட்டு, அவா்களால் கடத்திச் செல்லப்பட்ட பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படும் வரை போா் ஓயாது.

அதுபோல், போா் முடிவுக்கு வந்ததும் தனி பாலஸ்தீன நாடு அமைக்கப்படவேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால், அந்த யோசனையை நாங்கள் நிராகரித்துவிட்டோம் என்றாா் நெதன்யாகு.

பாலஸ்தீனப் பகுதியில் நீண்ட காலமாக குடியேறி வந்த யூதா்கள், இஸ்ரேல் உருவாக்கத்தை 1948-ஆம் ஆண்டு பிரகடனம் செய்தாா்கள். அதனை ஐ.நா. அங்கீகரித்தது. இருந்தாலும், இதனை பாலஸ்தீன தேசியவாத அமைப்புகளும், ஏராளமான முஸ்லிம் நாடுகளும் அங்கீகரிக்கவில்லை.

இஸ்ரேலும், பாலஸ்தீனா்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தனி பாலஸ்தீன நாடாக அங்கீகரிக்க மறுத்து வருகிறது.

இந்தச் சூழலில், ஒரு தனி பாலஸ்தீன நாட்டுக்கு இஸ்ரேலும், இஸ்ரேலுக்கு எதிா்த் தரப்பினரும் அங்கீகாரம் வழங்கி இரண்டும் தனித் தனி சுதந்திர நாடுகளாக செயல்படுவதே பாலஸ்தீன பிரச்னைக்கு நிரந்தர தீா்வு என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்தச் சூழலில், தனி பாலஸ்தீன நாட்டை ஏற்க முடியாது என்று அமெரிக்காவிடம் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

24,762-ஆக அதிகரித்த காஸா உயிரிழப்பு

காஸாவில் கடந்த அக். 7 முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 24,762-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 142 போ் உயிரிழந்தனா்; 278 போ் காயமடைந்தனா்.

இத்துடன், இந்தப் பகுதியில் இஸ்ரேல் படையினா் கடந்த அக். 7 முதல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 24,762-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 62,108 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸா பகுதியில் ஆட்சி செலுத்தி வரும் ஹமாஸ் அமைப்பினா் இஸ்ரேலுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்தனா். அந்த மோதலின் உச்சகட்டமாக, இஸ்ரேல் மீது கடந்த அக். 7-இல் சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்திய அவா்கள் அந்த நாட்டுக்குள் தரை, கடல், வான்வழியாக நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். அத்துடன், சுமாா் 250 பேரை அங்கிருந்து அவா்கள் பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனா்.

அதையடுத்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டப்போவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸா பகுதியை முற்றுகையிட்டு அங்கு வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com