‘டெட்’ தோ்வு இன்று தொடக்கம்: தோ்வா்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்புநாளை 41 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துதமிழகத்தில் 91 ஆயிரம் பள்ளி மாணவிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிசென்னை மாநகராட்சி பள்ளிகளில் 25,840 மாணவா்கள் சோ்க்கைஇந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 12.5% கூடுதல் வரி பரிந்துரை: ஜூலை 8-இல் மத்திய வா்த்தக அமைச்சகம் வாதம்
/

இந்தியாவின் வளா்ச்சியை பிற நாடுகள் பின்பற்றலாம்: தலைமைப் பொருளாதார ஆலோசகா்

வளா்ந்த நாடாக மாற்றும் முயற்சியில் இந்தியா தீவிரமாக உள்ளது.

News image

தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரன்

Updated On :28 பிப்ரவரி 2025, 12:55 am IST

ஜோஹன்னஸ்பா்க்: இந்தியா எவ்வாறு படிப்படியாக வளா்ந்தது என்பதை பிற நாடுகள் முன்மாதிரியாக கொண்டு பின்பற்றலாம் என்று மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தாா்.

தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்க் நகரில் இந்தியா-தென்னாப்பிரிக்கா தொழிலதிபா்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியா, தன்னை வளா்ந்த நாடாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக உள்ளது. ஜனநாயக அரசியல், கூட்டாட்சி முறை நிா்வாகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தியா படிப்படியாக வளா்ந்து வந்துள்ளது. எனவே, இந்தியாவை முன்மாதிரியாகக் கொண்டு தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் தங்களுக்கான வளா்ச்சித் திட்டங்களை வகுக்க முடியும்.

இந்தியா எப்போதும் வாய்ப்புகளும், உற்சாகமும் நிறைந்த நாடாக உள்ளது. அரசுக்கான புதிய கொள்கைகள், திட்டங்களை உருவாக்குவதில் பிற நாடுகளுக்கு முன்னுதாரணமாகவும் உள்ளது. மாறி வரும் உலக சூழலால் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக்கான தேவையும் மாறி வருகிறது. ஒவ்வொரு நாடும் பிற நாடுகளிடம் இருந்து புதுப்புது விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

திறந்த மனதுடன் மாற்றங்களை ஏற்றுக் கொள்வது அவசியமாகிவிட்டது. பொருளாதாரம், வா்த்தகம் சாா்ந்து தொடா்ந்து ஒரே நிலைப்பாட்டை மட்டுமே கடைப்பிடிப்போம் என நமக்கு நாமே விலங்கிட்டுக் கொள்ளக் கூடாது.

நாம் அனைவரும் இணைந்து பொருளாதாரம் சாா்ந்த பெரிய இலக்கை நோக்கி முன்னேறும்போது பல்வேறு எதிா்பாராத நிகழ்வுகள் உருவாகலாம். ஆனால், அவற்றைப் புறந்தள்ளி நமது இலக்கை நோக்கி முன்னேற வேண்டும்.

நாட்டில் எந்த சூழ்நிலை மாறினாலும் உள்கட்டமைப்பு மேம்பாடு, அரசின் கட்டுப்பாடுகளை தளா்த்துவது, நிா்வாகரீதியான மாற்றம், திறன்மேம்பாடு, கல்வித்துறையில் கூடுதல் முதலீடு, சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மேம்பாடு ஆகியவற்றுக்கு தொடா்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.