
இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் இந்தியாவுக்கு 20 முதல் 25 சதவிகித வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றது முதல் பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறார். இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு அதிக இறக்குமதி விதித்து டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.
மேலும், அமெரிக்காவுக்கு வரி விதிக்கும் மற்றும் டாலரை அழிக்கும் நோக்கில் செயல்படும் பிரிக்ஸ் நாடுகள் கடுமையான வரிவிதிப்பை எதிர்கொள்ளக்கூடும் என அதிபர் டிரம்ப் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். மேலும், வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதியில் இருந்து பரஸ்பர வரி விதிப்பு அமலுக்கு வரும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்து டிரம்ப் பேசுகையில், “இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன.
ஒருவேளை இந்தியா இந்த வர்த்தக ஒப்பந்தத்துக்கு முடிவு எட்டப்படவில்லை என்றால் 25 சதவிகிதம் வரை இறக்குமதி வரியை எதிர்கொள்ளக்கூடும்.
இந்தியா நல்ல நண்பராக இருந்து வந்தாலும், வேறு எந்த நாடும் வசூலிக்காத அளவிற்கு அமெரிக்காவிடம் வரி வசூலித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளாத அனைத்து நாடுகளுக்கும் 15 அல்லது 20 சதவிகிதம் மட்டுமே வரி விதிப்பது குறித்து பரிசீலித்து வந்த நிலையில், கனடாவுக்கு 35 சதவிகிதமும், அல்ஜீரியா, இலங்கை மற்றும் இராக் ஆகிய நாடுகளுக்கு 30 சதவிகித வரியும், புரூணே, லிபியா மற்றும் மால்டோவா ஆகிய நாடுகளுக்கு 25 சதவிகிதமும், பிலிப்பின்ஸுக்கு 20 சதவிகிதமும் டிரம்ப் அதிரடியாக வரி விதித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : மெஸ்ஸி.. மெஸ்ஸி..! இந்த முறை கோல்டு பிளே ‘கிஸ் கேம்’மில்..!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.