
அமெரிக்காவின் தாக்குதல்களில் தங்களது அணுசக்தி தளவாடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் கடந்த ஜூன் 13 ஆம் தேதி முதல் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் கடுமையான போர் நடைபெற்று வந்தது. பின்னர், அந்தப் போரானது 12-வது நாளை எட்டிய நிலையில் போர்நிறுத்தம் அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று (ஜூன் 24) அறிவித்தார்.
இந்தப் போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானிலுள்ள 3 அணுசக்தி தளவாடங்கள் மீது அமெரிக்கா பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல்களில், ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் தங்களது அணுசக்தி தளவாடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதை, ஈரானின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பாகேய் இன்று (ஜூன் 25) உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறுகையில், “எங்களது அணுசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்துள்ளதை உறுதியாகச் சொல்லலாம்” எனக் கூறியுள்ளார். இருப்பினும், அணுசக்தி தளவாடங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் குறித்து விரிவானத் தகவல்கள் ஈரான் தரப்பில் வெளியிடப்படவில்லை.
முன்னதாக, அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் அணுசக்தி தளவாடங்கள் முற்றிலுமாக அழிக்கப்படவில்லை என பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு (உளவுத்துறை) வெளியிட்ட அறிக்கையை, அதிபர் டிரம்ப் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஈரானின் அணுசக்தி தளத்தை பங்கர் பஸ்டர் குண்டுகள் முழுமையாக அழிக்கவில்லை! - உளவுத்துறை பரபரப்பு தகவல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.