
பாகிஸ்தானின் சிந்து நதிநீர் வாரியத்தின் ஆலோசனைக் குழுவானது, செனாப் ஆற்றில் நீர்வரத்தை இந்தியா நிறுத்தியிருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் உருவாகியிருக்கும் நிலையில், பாகிஸ்தான் செல்லும் செனாப் ஆற்றின் நீரை இந்தியா நிறுத்தியது.
பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டபோதே, சிந்து நதிநீர்ப் பகிர்வு ஒப்பந்தம் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், செனாப் ஆற்றின் அனைத்து மதகுகளையும் இந்தியா மூடிய நிலையில், செனாப் ஆறு வறண்டு, பாகிஸ்தானுக்கு வரும் நீர்வரத்தும் மெல்ல குறைந்து வருகிறது.
இந்த நிலையில்தான், பாகிஸ்தானின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், பாகிஸ்தானுக்கு செனாப் வழியாக வரும் நீரை 90 சதவீதம் இந்தியா நிறுத்திவிட்டது. மின் உற்பத்திக்காக சில மணி நேரங்கள் இந்தியா தண்ணீரை நிறுத்தி வைப்பது வழக்கம்தான். ஆனால் சில மணி நேரத்தில் திறந்துவிட்டுவிடும். ஆனால் தற்போது செனாப் மீது அமைக்கப்பட்டுள்ள சலால் அணையின் அனைத்து மதகுகளையும் மூடிவிட்டது.
இந்த ஆற்று நீரை நம்பியே பாகிஸ்தானின் பெரும்பாலான விவசாயப் பணிகள் உள்ளன. இதனால் மே-ஜூன் இடையே மேற்கொள்ளப்படும் காரிப் சாகுபடி பெரும்பாலும் பாதிக்கப்படும் என்றும், அடுத்து ஜூன் - செப்டம்பர் காரிப் சாகுபடியை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.