
காஸா மீது இஸ்ரேல் இன்று (மே 16) நடத்திய வான்வழித் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் அரசுமுறைப் பயணத்தை முடித்துக்கொண்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவுக்குத் திரும்பிய நிலையில், காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.
காஸாவின் ஜபாலியா பகுதியில் இன்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வெளித் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டதாக ஏபி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
படுகாயம் அடைந்தவர்கள், வடக்கு காஸாவிலுள்ள இந்தோனேஷியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
டிரம்ப் பயணத்தால் மாற்றம் ஏற்படுமா?
மத்திய கிழக்கு நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள டிரம்ப், அதனை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பிய நிலையில், வடக்கு காஸாவில் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு நாட்டில் டிரம்ப் மேற்கொண்ட பயணத்தின் மூலம் காஸா - இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஏற்படலாம் அல்லது காஸாவுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகள் தங்குதடையின்றி செல்ல வழிவகை ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்றும் காஸாவின் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.
தொடர்ந்து மூன்றாவது மாதமாக காஸாவுக்குச் செல்லும் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் ராணுவம் தடுத்து வருகிறது. இதனால், அடிப்படை தேவைகளான உணவு, மருந்துகள் இன்றி தவிக்கும் நிலையே காஸாவில் உள்ளது.
ஜபாலியா அகதிகள் முகாம் மற்றும் பெயிட் லாஹியா பகுதிகளில் கடந்த சில நாள்களாக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காஸா சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இதையும் படிக்க | பாகிஸ்தானில் அணுக் கதிா்வீச்சு கசிவு இல்லை! சா்வதேச அணுசக்தி முகமை அறிவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.