
உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியுடனான சந்திப்புக்குப் பிறகு, உக்ரைனும் ரஷியாவும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசியுள்ளார்.
ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா ஆரம்பம் முதலே ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இந்த சந்திப்பில் அமெரிக்காவின் அதிநவீன வலிமையான 'டோமாஹாக் ஏவுகணைகளை' உக்ரைனுக்கு வழங்க டிரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மாறாக ரஷியாவும் உக்ரைனும் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஸெலென்ஸ்கியுடன் சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய டிரம்ப், 'உக்ரைனும் ரஷியாவும் இப்போது இருக்கும் இடத்தில் இருந்தே இந்த கொடூர போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இருவரும் வெற்றியைக் கோரட்டும், வரலாறு முடிவு செய்யட்டும்' என்று தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
செய்தியாளர்களுடன் இதுகுறித்துப் பேசிய டிரம்ப், 'போர்க்களத்திலேயே இந்த போரை நிறுத்துங்கள். இரு தரப்பினரும் வீட்டிற்குச் செல்ல வேண்டும். உயிர்கள் கொல்லப்படுவதை நிறுத்த வேண்டும், அவ்வளவுதான்' என்று கூறினார்.
முதலில் ரஷியாவிடம் இழந்த நிலத்தை உக்ரைன் திரும்பப் பெற வேண்டும் என்று கூறிய டிரம்ப் இப்போது, 'உக்ரைனிடமிருந்து பெற்ற நிலத்தை அதாவது போரில் கைப்பற்றிய இடத்தை ரஷியாவே வைத்துக்கொள்ளட்டும்' என்று கூறியுள்ளார்.
முன்னதாக டிரம்ப், கடந்த வியாழக்கிழமை ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசியுள்ளார்.
உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி இதுபற்றி, 'போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கான நேரம் இது' என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.