
ரஷிய எண்ணெய் கொள்முதலை இந்தாண்டு இறுதிக்குள் நிறுத்துவதாக பிரதமர் மோடி உறுதியளித்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டேவுடன் ஆலோசனை நடத்திய பிறகு, செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், ரஷியா - இந்தியா இடையேயான எண்ணெய் வர்த்தகம் குறித்து பேசினார்.
டிரம்ப் பேசியதாவது:
“ரஷிய எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாக இந்தியா என்னிடம் கூறியுள்ளது. இது ஒரு நீண்ட செயல்முறை. உடனடியாக நிறுத்த முடியாது.
பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று தொலைபேசியில் பேசினேன். இந்தாண்டு இறுதிக்குள் ரஷிய எண்ணெய் கொள்முதலை முற்றிலும் நிறுத்துவார்கள். இது மிகப்பெரிய விஷயம், கிட்டத்திட்ட 40 சதவீதம் எண்ணெய் கொள்முதலை இந்தியா செய்கிறது.” எனத் தெரிவித்தார்.
இருப்பினும், இதுதொடர்பாக இந்தியா தரப்பில் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
ஏற்கெனவே, கடந்த வாரம், பிரதமர் மோடியுடன் பேசியதாகவும், ரஷிய எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்தப் போவதாகவும் டிரம்ப் அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், மோடியுடன் டிரம்ப் உரையாடியது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, மோடியுடன் பேசியதாக கூறியதை இந்தியா மறுத்தது தொடர்பாக டிரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது பேசிய டிரம்ப்,
”அவர்கள் அப்படி கூறியிருந்தால் கூடுதல் வரியைச் செலுத்த வேண்டியிருக்கும். அவர்கள் அப்படிச் சொன்னதாக நான் நம்பவில்லை. நான் பிரதமர் மோடியுடன் பேசினேன், ரஷிய எண்ணெய்யை வாங்கப் போவதில்லை என்று கூறினார்” எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.