
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகைக்கு எதிராக லண்டனில் 50க்கும் மேற்பட்ட பிரசாரக் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரிட்டன் சென்றுள்ள டிரம்ப், நாளை (செப். 18) பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மரை சந்தித்துப் பேசவுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாள்கள் அரசு முறைப் பயணமாக பிரிட்டன் சென்றுள்ளார். இன்று பிரிட்டன் சென்றடைந்த அவருக்கு மன்னர் மூன்றாம் சார்லஸ் அரசு முறைப்படி உற்சாக வரவேற்பளித்தார்.
அரசு விவகாரங்கள் மேற்கொள்ளப்படும் வின்சோர் கோட்டைப் பகுதிக்கு டிரம்ப்பையும் அவரின் மனைவி மெலனியாவையும் மன்னர் சார்லஸ் குதிரைகள் பூட்டிய வாகனத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்றார்.
டிரம்ப் வருகையையொட்டி, லண்டன் நகரம் முழுவதுமே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. லண்டன் நகரில் மட்டும் காவல் துறையினர் 1,600 பேர் குவிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனின் மற்ற படைகளில் இருந்து கூடுதல் உதவிக்காக 500 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே மத்திய லண்டனில் பிபிசி செய்தி நிறுவனத்தின் அலுவலகத்தை நோக்கி 50க்கும் மேற்பட்ட பிரசாரக் குழுக்கள் பேரணியாகச் சென்றனர். கைகளில் டிரம்ப்புக்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். காலநிலை மாற்றம், நிறவெறி எதிர்ப்பு, பாலஸ்தீன ஆதரவுக் குழுக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் அனைத்துக்கும் பிரதிநிதி அதிபர் டிரம்ப்தான் எனக் குறிப்பிட்டு, பிரிட்டன் - அமெரிக்கா கூட்டணியை நிறுத்தக்கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஜோ கார்ட்னர் கூறியதாவது, ''எங்கள் அரசு முதுகெலும்பைக் காட்ட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எங்களுக்கு சிறிதளவேனும் பெருமை உள்ளது. லண்டனில் அதிபர் டிரம்ப்பின் அரசியல் வெறுப்புணர்வையே வளர்க்கிறது'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | 140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.