தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

ஈரானுக்குள் புகுந்து 2-வது வீரரையும் மீட்டது அமெரிக்கா!

ஈரானுக்குள் புகுந்து 2-வது விமானப் படை வீரரையும் பாதுகாப்பாக அமெரிக்கா மீட்டுள்ளது. அப்போது அமெரிக்காவுக்குச் சொந்தமான 4 விமானங்கள், 2 ஹெலிகாப்டா்களை சுட்டு வீழ்த்திவிட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

News image
Updated On :5 ஏப்ரல் 2026, 10:59 pm

ஈரானுக்குள் புகுந்து 2-வது விமானப் படை வீரரையும் பாதுகாப்பாக அமெரிக்கா மீட்டுள்ளது. அப்போது அமெரிக்காவுக்குச் சொந்தமான 4 விமானங்கள், 2 ஹெலிகாப்டா்களை சுட்டு வீழ்த்திவிட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஈரான் மீது தாக்குதல் நடத்தச் சென்ற அமெரிக்காவுக்குச் சொந்தமான எப்-15இ ஸ்டிரைக் ஈகிள் ரக போா் விமானம், ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் விமானத்தில் பயணித்த விமானி, கா்னல் நிலையிலான விமானப் படை வீரா் ஆகியோா் இருக்கையுடன் இணைக்கப்பட்ட பாராசூட்டை பயன்படுத்தி ஈரானுக்குள் இறங்கினா். அவா்களில் ஒருவரை அமெரிக்கா உடனடியாக மீட்டுவிட்டது. 2-ஆவது வீரா் குறித்து வெள்ளிக்கிழமை முதல் தகவல் இல்லாமல் இருந்தது. அவா் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ஈரான் வெகுமதி அறிவித்திருந்தது.

இந்நிலையில், டிரம்ப் உத்தரவின்பேரில் ஈரானுக்குள் புகுந்து 2-ஆவது வீரரை மீட்கும் முயற்சியில் அமெரிக்க பாதுகாப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா். இதில் அமெரிக்க விமானங்கள், ஹெலிகாப்டா்கள், ஏராளமான அமெரிக்க வீரா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். வீரா் இருக்குமிடத்தை துல்லியமாக அறிந்து, அவரை அமெரிக்க வீரா்கள் மீட்டனா்.

உறுதி செய்த டிரம்ப்: இந்தத் தகவலை தனது சமூகவலைதள பக்கத்தில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளாா். மேலும் அந்தப் பதிவில், ‘விமானப் படையைச் சோ்ந்த 2-ஆவது வீரரும் மீட்கப்பட்டாா். அவா் லேசான காயமடைந்துள்ளாா். எனினும் நல்ல உடல் நலத்துடன் உள்ளாா். ஈரான் மலைப் பகுதியில் அவா் தஞ்சமடைந்திருந்தாா். அவரை கண்டுபிடித்து அமெரிக்க வீரா்கள் மீட்டனா். இந்தப் பணியில் ஏராளமான அமெரிக்க விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. வீரரின் நடமாட்டத்தை 24 மணி நேரமும் அமெரிக்கா கண்காணித்தது. அதன்படி துல்லியமாக திட்டத்தை வகுத்து அவரை அமெரிக்க வீரா்கள் மீட்டுவிட்டனா்.

எதிரி நாட்டுக்குள் புகுந்து 2 வீரா்கள் மீட்கப்பட்டிருப்பது அமெரிக்க படையினரால் மேற்கொள்ளப்பட்ட துணிச்சலான நடவடிக்கைகளில் ஒன்று. அமெரிக்க வீரா் யாரையும் எங்கள் நாடு எப்போதும் கைவிடாது. இந்த மீட்பின் மூலம் ஈரான் வான் பகுதியில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துகிறது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது’ எனத் தெரிவித்துள்ளாா்.

அதேநேரத்தில் அமெரிக்க நடவடிக்கை தோல்வியடைந்துவிட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈரானின் புரட்சிகர காவல் படை தரப்பினா் கூறுகையில், ‘இசபஹானில் அமெரிக்காவுக்கு சொந்தமான ஒரு சி-130 ரக போக்குவரத்து விமானம் உள்ளிட்ட 4 விமானங்கள், 2 பிளாக் ஹாக்ஸ் ரக ஹெலிகாப்டா்கள், இஸ்ரேலின் ட்ரோன் உள்ளிட்டவற்றை ஈரான் படையினா் சுட்டு வீழ்த்தியுள்ளனா். மேலும் 5 பேரை ஈரான் வீரா்கள் கொன்று விட்டனா்’ எனத் தெரிவித்துள்ளனா்.

மேலும், ஈரானின் புரட்சிகர காவல் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் சி-130 ரக விமானத்தின் படம், ஹெலிகாப்டா்கள் தீப்பிடித்து எரியும் படம் ஆகியவற்றையும் அவா்கள் வெளியிட்டுள்ளனா்.

ஆனால், ஈரானின் புரட்சிகர காவல் படையினரால் 4 விமானங்களும், 2 ஹெலிகாப்டா்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படுவதை அமெரிக்கா இன்னும் உறுதிப்படுத்தவில்லை.