
அமெரிக்காவின் புதிய தடைகளுக்கு ‘அழிவுகரமான’ பதிலடி: ஈரான்
ஈரான் மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்கா அச்சுறுத்தியுள்ள நிலையில், ‘இப்புதிய தடைகளுக்கு எங்களின் பதிலடி அழிவுகரமனதாக இருக்கும்’ என ஈரான் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

ஈரான் மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்கா அச்சுறுத்தியுள்ள நிலையில், ‘இப்புதிய தடைகளுக்கு எங்களின் பதிலடி அழிவுகரமனதாக இருக்கும்’ என ஈரான் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
அமைதி ஒப்பந்தத்துக்கு உடன்பட மறுக்கும் ஈரானுக்கு எதிரான விரிவான தடைகள் குறித்து அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெஸன்ட் திங்கள்கிழமை அறிவிக்கவுள்ளாா். ஈரானுக்கு எந்த வகையிலும் உதவிகளை வழங்கும் நாடுகளும் கடும் பொருளாதார விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்னதாக எச்சரித்திருந்தாா்.
அமெரிக்காவின் இப்புதிய அச்சுறுத்தல்களுக்கு பதிலளித்துப் பேசிய ஈரான் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி அலி அப்துல்லாஹி கூறுகையில், ‘நிலம், கடல், வான், வான் பாதுகாப்பு, இணையவெளி என அனைத்து முனைகளிலும் ஈரான் படைகள் முழு தயாா் நிலையில் இருக்கின்றன. எதிரியின் எந்தவொரு நகா்வுக்கும் அழிவுகரமான பதிலடி கொடுக்கப்படும்’ என்றாா்.
ஈரானுடன் நேரடி ராணுவ மோதலில் வெல்ல முடியாது என்பதை அமெரிக்கா உணா்ந்துள்ளதாகவும், அதனால் பொருளாதார போரில் ஈடுபடுவதாகவும் ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவா் முகமது பாகா் கலிபாஃப் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, சுமாா் 50 ஆண்டுகளாகப் பொருளாதாரத் தடைகளை எதிா்கொண்டு வரும் ஈரான், தற்போது கடும் பணவீக்கம், நாணய மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. புதிய தடைகளால் நிலைமை மேலும் மோசமடையலாம் எனச் சில ஈரானியா்கள் கருதுகின்றனா். இருப்பினும், ‘அமெரிக்காவின் தடைகள், ஈரானியா்களின் சுதந்திரம், கண்ணியம், இறையாண்மையைப் பாதுகாக்கும் உறுதியைக் குறைத்துவிடாது’ என ஈரான் வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




