

நாக்பூர் : அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவில் ஏற்படுள்ள முன்னேற்றம் குறித்து ரஷியா வெளிப்படையாகக் கருத்து தெரிவித்துள்ளது.
ரஷியாவிடமிருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய்க் கொள்முதலைக் குறைக்க அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இவ்விவகாரத்தில் இந்தியாவுக்கு அழுத்தம் தர, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய பொருள்களுக்கு கூடுதல் வரி விதித்து பெருமதிர்ச்சியளிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டார்.
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் வெனிசுவேலாவிடம் இருந்து அதிகளவிலான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய இந்தியா ஒப்புக்கொண்டதாகச் சுட்டிக்காட்டிய டிரம்ப், இந்திய பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த 25 சதவீத வரியை 18 சதவீதமாக குறைப்பதாகத் திங்கள்கிழமை(பிப். 2) தெரிவித்தாா்.
இந்த நிலையில், அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவில் ஏற்படுள்ள முன்னேற்றம் குறித்து ரஷியாவின் கண்ணோட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
இது குறித்து, மும்பையிலுள்ள ரஷிய சம்மேளனத்தின் தூதர் இவான் ஃபெடிசோவ் சனிக்கிழமை(பிப். 7) பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ளதொரு பேட்டியில் தெரிவித்திருப்பதாவது :
“ரஷியாவுடன் ஒத்துழைப்பை நல்க விரும்பும் எந்தவொரு நாட்டுடனும் நாங்கள் ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம். இந்தியாவுக்கும் எங்களுக்கும் நல்லுறவு நீடிக்கிறது. நம்பிக்கை மற்றும் பரஸ்பர மதிப்பின் அடிப்படையிலான இந்த நல்லுறவு இன்றைய காலக்கட்டத்தில் முக்கியத்துவமானது.
அதேவேளையில், அமெரிக்கா அல்லது கஜகஸ்தான் அல்லது பிரேஸிலுடன் வேண்டுமானாலும் இந்தியா ஒத்துழைத்து உறவு பேண விரும்பினால், அது இந்தியாவின் நிலைப்பாடாகும்.
இந்தியாவுடன் எங்களுக்கு வலுவானதொரு உறவு உள்ளதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். இருநாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த எங்களுக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் உள்ளன” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.