

பாகிஸ்தானை கழிப்பறை காகிதத்தைவிட மோசமாக அமெரிக்கா பயன்படுத்துவதாக பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது தேவைகளுக்காக பாகிஸ்தானை பயன்படுத்தி, பின்னர் தூக்கி எறிந்துவிட்டதாகவும் அவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதலுக்குப் பிறகு பாகிஸ்தானும், அமெரிக்காவும் மிக நெருக்கம் காட்டி வருகின்றன. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதலை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்தை இந்தியா நிராகரித்த நிலையில், பாகிஸ்தான் டிரம்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததுடன் அவருக்கு நோபல் பரிசு வழங்கவும் பரிந்துரைத்தது.
இந்த நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர், அமெரிக்காவை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது:
”1999 ஆம் ஆண்டுக்குப் பிறகு, குறிப்பாக ஆப்கானிஸ்தானுடனான போரின்போது மீண்டும் அமெரிக்காவின் உதவியைப் பாகிஸ்தான் நாடியது மிகப்பெரிய ஆபத்தாக மாறியுள்ளது. அன்று எடுத்த முடிவு, நாட்டுக்கு நீடித்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவுகளை பல தசாப்தங்கள் கழித்து இன்றும் பாகிஸ்தான் அனுபவித்து வருகின்றது.
பாகிஸ்தான் தனக்கு தொடர்பில்லாத போர்களில் பங்கேற்றதால் இன்றுவரை நிலைத்தன்மை இன்றி இருக்கிறது. ஜிஹாத் என்ற பெயரில் பாகிஸ்தானியர்களை அணிதிரட்டி போராட அனுப்பியது தவறானது மற்றும் அழிவுகரமானது.
மறைந்த ராணுவ ஆட்சியாளர்களான ஜியா-உல்-ஹக் மற்றும் பர்வேஸ் முஷாரப் ஆகியோர் பாகிஸ்தானை வெளிநாட்டுப் போர்களில் சிக்கவைத்தனர். நமது கூட்டாளிகள் நம்மைவிட்டு விலகிச் சென்ற பிறகு, தனியாக விளைவுகளை சந்தித்து வருகிறோம்.
பாகிஸ்தானை தனது தேவைக்காக பயன்படுத்திய அமெரிக்கா, பின்னர், கழிப்பறை காகித்தைவிட மோசமாக தூக்கி எறிந்துவிட்டது. தலிபான்களுக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் பாகிஸ்தான் நின்றது. ஆனால், பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தபோது, அமெரிக்கா உதவாமல் பின்வாங்கியது.
நாங்கள் சந்தித்த இழப்புகளை ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது. நமது முடிவுகள் மீளமுடியாத தவறுகள், அவை பாகிஸ்தானை மற்றவர்களால் இயக்கப்படும் மோதல்களில் ஒரு பகடைக்காயாக மாற்றியது” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.