

மடகாஸ்கர் நாட்டில், கெஸானி புயலால் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 20 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் 4 ஆவது மிகப் பெரிய தீவான மடகாஸ்கர் நாட்டின் கடல்பகுதியில் உருவான கெஸானி புயலால் அந்நாட்டின் கிழக்கு நகரமான டோமாசினாவில் கடந்த செவ்வாய்க்கிழமை (பிப். 10) மாலை முதல் அதிக கனமழை பெய்து வருகின்றது.
இதனைத் தொடர்ந்து, சுமார் 3 லட்சம் மக்கள் வசிக்கும் டோமாசினா நகரம் கெஸானி புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு இடங்களில் உள்ள வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதுவரை, டோமாசினாவில் கெஸானி புயலின் பாதிப்புகளால் 20 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 33 பேர் படுகாயமடைந்ததுடன், சுமார் 15 பேர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரக் கட்டமைப்புகள் முழுவதும் சேதமடைந்துள்ளதால் டோமாசினா நகரம் முழுவதும் இருளில் மூழ்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கெஸானி புயலினால் மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதால் பல்வேறு பகுதிகளுக்கு நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளதாகக் கூறி மடகாஸ்கரின் வானிலை சேவை சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இத்துடன், புயலால் பாதிக்கப்பட்ட டோமாசினாவை மடகாஸ்கர் அதிபர் மைக்கேல் ராண்ட்ரியானிரினா நேரில் பார்வையிட்டார். அந்த நகரத்தின் 75 சதவிகித கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.