

பிரேசில் நாட்டின் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வரும் பிப். 18 அன்று இந்தியா வருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் அதிபர் லூலா வரும் பிப். 18 அன்று அரசு முறைப் பயணமாக இந்தியா வருவதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிப். 22 ஆம் தேதி வரையிலான அவரது இந்தப் பயணத்தில் பல முக்கிய நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தில்லியில் வரும் பிப். 16 முதல் பிப். 20 வரையில் நடைபெறும் 2 ஆவது செய்யறிவு (ஏஐ) உச்சி மாநாட்டில் அதிபர் லூலா பங்கேற்பார் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, வரும் பிப். 21 அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரை பிரேசில் அதிபர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
இத்துடன், மிகப் பெரிய வெளிநாட்டுப் பயணமாக பிரேசில் அதிபர் மாளிகையின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ள இந்தப் பயணத்தில், இருநாடுகளுக்கு இடையிலான முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
இந்தப் பயணம், அமெரிக்கா மற்றும் சீனா போன்ற பாரம்பரிய கூட்டாளிகள் மீதான பிரேசிலின் பொருளாதார சார்பைக் குறைக்கவும், இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்தும் முயற்சி எனவும் கூறப்படுகிறது. இதனால், பிரேசில் அதிபர் லூலாவின் இந்தியப் பயணம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
ஏற்கெனவே, தில்லியில் நடைபெறும் 2 ஆவது செய்யறிவு (ஏஐ) உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் இந்தியா வருகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.