

தில்லியில் நடைபெறும் செய்யறிவு உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஸ்பெயின் நாட்டின் அதிபர் பெட்ரோ சான்செஸ் தனது இந்தியப் பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
தில்லியில் நடைபெறும் செய்யறிவு உச்சி மாநாட்டில் பங்கேற்க, மத்திய அரசின் அழைப்பை ஏற்று பிரான்ஸ், பூடான், பிரேசில், கஜகஸ்தான் உள்ளிட்ட ஏராளமான நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதமர்கள் இந்தியா வந்துள்ளனர்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ஸ்பெயின் நாட்டின் அதிபர் பெட்ரோ சான்செஸ் கடந்த புதன்கிழமை (பிப். 18) இந்தியா வந்தடைந்தார்.
இந்தப் பயணத்தில், அவருடன் ஸ்பெயின் அரசின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் குடிமை சேவை அமைச்சர் ஆஸ்கார் லோபஸ் மற்றும் வேளாண்மை, மீன்வளம் மற்றும் உணவுத் துறை அமைச்சர் லூயிஸ் பிளானாஸ் புச்சாட்ஸ் ஆகியோரும் வருகை தந்தனர்.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி நேற்று தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் அதிபர் சான்செஸை நேரில் சந்தித்து உரையாடினார். இந்தச் சந்திப்பில், இருநாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் செய்யறிவு உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட ஸ்பெயின் அதிபர் சான்செஸ் இன்று (பிப். 19) தனது இந்தியப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு ஸ்பெயின் புறப்பட்டுள்ளார்.
மேலும், தாயகம் திரும்பும் அதிபர் சான்செஸை மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் ஜெயந்த் சவுத்ரி நேரில் சென்று வழியனுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.