

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனக் கூறி அவர் விதித்துள்ள வரிகளை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகள் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்தவும், ஒத்துழைப்புகளைப் பெறவும் அதிகப்படியான வர்த்தக வரிகளை விதித்து அழுத்தம் கொடுத்து வந்தார். இதனால், அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வந்த பல்வேறு நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
அதிபர் டிரம்ப் உலக நாடுகளின் மீது அமெரிக்காவின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் வரிகளை விதிப்பதற்கு அவருக்கு எந்தவொரு அதிகாரமும் கிடையாது எனக் கூறிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் அவர் விதித்துள்ள வரிகளை இன்று (பிப். 20) ரத்து செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, அமெரிக்க கீழமை நீதிமன்றம் அதிபர் டிரம்ப் விதிக்கும் வரிகள் அனைத்தும் சட்டவிரோதமானவை எனக் கூறி கடந்த 2025 மே மாதம் தீர்ப்பளித்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு டிரம்ப் நிர்வாகத்திற்குப் பேரடியாகக் கருதப்படுகிறது.
ஆனால், உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பானது டிரம்ப் விதித்துள்ள மற்ற வரிகளை பாதிக்காது என்றும், அமெரிக்காவின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் விதிக்கப்பட்ட வரிகளை மட்டுமே ரத்து செய்யும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், அதிபர் டிரம்ப் விதித்துள்ள வரிகளால் இறக்குமதியாளர்களிடம் இருந்து அமெரிக்க அரசுக்குக் கிடைத்த பல பில்லியன் டாலர்கள் குறித்து நீதிமன்றம் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.