

ரஷிய எண்ணெய் விவகாரம்: ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா செலவிடுவதாக குற்றம்சாட்டிய டிரம்ப், அந்நாட்டுக்கு பொருளாதாரத் தடை விதித்ததுடன், பிற நாடுகளும் வர்த்தகம் மேற்கொள்ளக் கூடாது என்று தெரிவித்திருந்தார்.
டிரம்ப்பின் எச்சரிக்கையை மீறி ரஷியாவுடன் தொடர்ந்து எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீதம் உள்பட மொத்தம் 50 சதவீத வரியை டிரம்ப் விதித்தார்.
ஆனால், ரஷிய எண்ணெய் விவகாரத்தில் நாட்டின் நலன்கருதியே முடிவு எடுக்கப்படும், வெளிப்புற அச்சுறுத்தல்களுக்கு அடிப்பணிய மாட்டோம் என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுடன் பேசுகையில் ரஷியாவுடன் இந்தியா எண்ணெய் வர்த்தகம் மேற்கொள்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த டிரம்ப் தெரிவித்ததாவது:
“அடிப்படையில் அவர்கள் என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பினார்கள். மோடி மிக அருமையான மனிதர். அவர் நல்லவர். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது அவருக்குத் தெரியும். என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பது முக்கியம் என்பதையும் அவர் அறிவார்.
அவர்கள் தொடர்ந்து ரஷியாவுடன் வர்த்தகம் செய்து வருகிறார்கள். நாங்கள் மிக விரைவாக வரியை உயர்த்த முடியும். அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.” எனத் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுடனான போருக்குப் பிறகு தள்ளுபடி விலையில் ரஷிய எண்ணெய்யை கொள்முதல் செய்யும் மிகப் பெரிய நாடாக இந்தியா மாறியுள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதத்தில் நாளொன்றுக்கு 20 லட்சம் பீப்பாய் எண்ணெய் வர்த்தகம் மேற்கொண்ட இந்தியா, டிசம்பரில் 12 லட்சம் பீப்பாய்களாக குறைத்துள்ளது.
2025 இறுதிக்குள் ரஷிய கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில், தொடர்ந்து ரஷியாவுடன் இந்தியா வர்த்தகம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.