பாகிஸ்தான் மருந்துகளின் விற்பனைக்குத் தடை! ஆப்கன் அரசு அதிரடி!
ஆப்கானிஸ்தான் நாட்டில், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் விற்பனைக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பாதைகள் கடந்த 2025 ஆம் ஆண்டு மூடப்பட்டன. இதனால், இருதரப்பும் கடும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் மாதம் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்குப் பிறகு சுங்கத் துறையின் அனுமதி வழங்கப்படாது என ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், வரும் பிப். 9 ஆம் தேதி முதல் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் விற்பனைக்குத் தடை விதிக்கப்படுவதாக, தலிபான் அரசின் நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
இதனால், அடுத்த 19 நாள்களில் பாகிஸ்தான் மருந்துகளின் அனைத்து பரிவர்த்தனைகளையும் முடிக்குமாறு வணிகர்களுக்கு தலிபான் அரசு அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, நிலத்தால் சூழப்பட்ட ஆப்கானிஸ்தான் பெரும்பாலான வர்த்தக ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஈரானின் துறைமுகங்களையே சார்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
In Afghanistan, the Taliban government has announced a ban on the sale of medicines imported from Pakistan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

