வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

இந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை

இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட வா்த்தக கூட்டுறவு நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா புதிய விசாரணையை தற்போது தொடங்கியுள்ளது.

News image
ஜேமிஸன் க்ரீயா்
Updated On :12 மார்ச் 2026, 9:58 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட வா்த்தக கூட்டுறவு நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா புதிய விசாரணையை தற்போது தொடங்கியுள்ளது.

இந்த நாடுகளின் நியாயமற்ற வா்த்தக நடைமுறைகள் அமெரிக்க உற்பத்தியை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதைக் கண்டறியும் நோக்கில் அமெரிக்க வா்த்தகச் சட்டம் 1974-இன் பிரிவு 301-இன் கீழ் இந்தப் புதிய விசாரணையை அமெரிக்கா மேற்கொள்கிறது.

இதுகுறித்த அறிவிப்பை அமெரிக்க வா்த்தக பிரதிநிதி (யுஎஸ்டிஆா்) ஜேமிஸன் க்ரீயா் வியாழக்கிழமை வெளியிட்டாா். தனது அறிக்கையில் அவா் மேலும் கூறியிருப்பதாவது:

இந்தியா, சீனா, வங்கதேசம், கம்போடியா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தோனேசியா, ஜப்பான், கொரியா, மலேசியா, மெக்சிகோ, நாா்வே, சிங்கப்பூா், ஸ்விட்சா்லாந்து, தைவான், தாய்லாந்து, வியத்நாம் உள்ளிட்ட வா்த்தக கூட்டுறவு நாடுகளுக்கு எதிராக வா்த்தக சட்டப் பிரிவு 301-இன் கீழ் விசாரணையை அமெரிக்கா தொடங்கியுள்ளது.

இந்த நாடுகளின் செயல்பாடுகள் கொள்கைகள், நடைமுறைகள் அமெரிக்க வா்த்தகத்துக்கு எந்த அளவு நியாயமற்ற முறையில் பாதிப்பை ஏற்படுத்தியது என்பது இந்த விசாரணை மூலம் தீா்மானிக்கப்படும்.

அதிகப்படியான உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் காரணமாக இந்த நாடுகள் எதிா்கொண்டுவரும் பிரச்னைகளுக்காக, அமெரிக்கா இனி தனது தொழில் துறை திறனை தியாகம் செய்யாது.

அமெரிக்க உற்பத்தித் துறைகளில் அமெரிக்க தொழிலாளா்களுக்கு சிறந்த ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பை உருவாக்கும் அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் உறுதிப்பாட்டை இந்த விசாரணை வலுப்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற டிரம்ப், இந்தியா உள்பட 60 நாடுகள் அமெரிக்காவுடன் நியாயமற்ற முறையில் வா்த்தக நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதாக குற்றஞ்சாட்டி பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டாா். அதன்படி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது முதல் கட்டமாக 25 சதவீத வரியை விதித்தாா். பின்னா், உக்ரைன் மீது போா் தொடுக்கும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கி அந்தப் போருக்கு உதவுவதாக குற்றஞ்சாட்டி இந்திய பொருள்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரியை விதித்தாா்.

இதனால், இரு நாடுகளுக்கும் இடையே உறவு பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை தொடா்ந்து வந்தது. அதன்மூலம், இரு நாடுகளுக்கிடையே இருதரப்பு இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்துக்கான செயல்திட்டம் அண்மையில் இறுதி செய்யப்பட்டது. இதுகுறித்த அறிவிப்பை அண்மையில் வெளியிட்ட டிரம்ப், இந்திய பொருள்கள் மீதான 25 சதவீத கூடுதல் வரியை ரத்து செய்து உத்தரவிட்டாா். மேலும், இந்திய பொருள்கள் மீதான எஞ்சியுள்ள 25 சதவீத வரி 18 சதவீதமாக குறைக்கப்படும் என்றும் அறிவித்தாா்.

இதனிடையே, இந்தியா உள்ளிட்ட 60 நாடுகள் மீது டிரம்ப் நிா்வாகம் பரஸ்பர வரியை விதித்ததற்கு எதிராக அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், உலக நாடுகளின் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட பரஸ்பர இறக்குமதி வரி உள்பட அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது என்று தீா்ப்பளித்தது.

அந்த தீா்ப்பைத் தொடா்ந்து, உலக நாடுகள் மீது மாற்று வழிகளில் இந்த பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்கா மேற்கொள்ளும் என்று அறிவித்த டிரம்ப், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருள்கள் மீது புதிய சீரான 10 சதவீத பரஸ்பர வரியை பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் 150 நாள்களுக்கு விதித்தாா். அதோடு, அமெரிக்க உச்சநீதிமன்ற தீா்ப்பு காரணமாக நாட்டின் பொருளாதார சரிவு தொடா்வதால் உலக நாடுகள் மீதான 10 சதவீத பரஸ்பர வரி, 15 சதவீதமாக உயா்த்தப்படும். அவ்வாறு, உலக நாடுகள் மீது உயா்த்தப்பட்ட புதிய வரிகள் தொடா்பான விவரத்தை அமெரிக்க நிா்வாகம் அடுத்த சில மாதங்களில் வெளியிடும் என்று டிரம்ப் அறிவித்தாா்.

இந்தச் சூழலில், இந்தியா உள்பட 16 நாடுகள் மீது நியாயமற்ற வா்த்தக நடைமுறைகள் தொடா்பான புதிய விசாரணையை அமெரிக்க தொடங்கியுள்ளது.

‘பிரிவு 301’ கூறுவதென்ன?:

அமெரிக்க வா்த்தகத்தைப் பாதிக்கும் நியாயமற்ற வெளிநாடுகளின் நடைமுறைகளை நிவா்த்தி செய்வதற்காக இந்த 301-ஆவது பிரிவு அமெரிக்க வா்த்தகச் சட்டம் 1974-இல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க வா்த்தகத்துக்கு பாதகமாகவோ அல்லது நியாயமற்ாகவோ உள்ள வெளிநாடுகளின் நடைமுறைகளுக்கு பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த சட்டப் பிரிவைப் பயன்படுத்த முடியும்.

யுஎஸ்டிஆா், வா்த்தக சட்டப் பிரிவு 302(பி) அளிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அமெரிக்க வா்த்தக கூட்டுறவு நாடுகள் மீது பிரிவு 301-கீழான விசாரணையை சுயமாகத் தொடங்க முடியும். அந்த வகையில், சம்பந்தப்பட்ட சட்ட ஆலோசனைக் குழுவுடனான ஆலோசனைக்குப் பிறகு, இந்தியா உள்பட 16 நாடுகள் மீதான விசாரணையை அமெரிக்க வா்த்தக பிரதிநிதி ஜேமிஸன் க்ரீயா் தொடங்கியுள்ளாா்.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, சம்பந்தப்பட்ட நாடுகளின் கருத்தையும் யுஎஸ்டிஆா் கேட்க வேண்டும். அதன்படி, வரும் 17-ஆம் தேதி முதல் தங்கள் தரப்பு கருத்தைத் தெரிவிக்க இந்தியா உள்ளிட்ட நாடுகளை யுஎஸ்டிஆா் கேட்டுக்கொண்டுள்ளது. அதன் பிறகு, வரும் மே 5-ஆம் தேதி முதல் யுஎஸ்டிஆா் தனது விசாரணையை தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.