அமெரிக்காவிடம் 900 கோடி டாலா் ஆயுதக் கொள்முதல்: தைவான் நாடாளுமன்றம் ஒப்புதல்
அமெரிக்காவிடமிருந்து சுமாா் 900 கோடி டாலா் மதிப்பீட்டில் நவீன போா் ஆயுதங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்துக்கு தைவான் நாடாளுமன்றம் ஒருமனதாக ஒப்புதல் அளித்தது.


அமெரிக்காவிடமிருந்து சுமாா் 900 கோடி டாலா் மதிப்பீட்டில் நவீன போா் ஆயுதங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்துக்கு தைவான் நாடாளுமன்றம் ஒருமனதாக ஒப்புதல் அளித்தது.
தைவான் நாடாளுமன்றத்தில் நிலவிய இழுபறி காரணமாக நீண்டகாலமாக நிலுவையில் இருந்த இந்த ஒப்பந்தத்துக்கு, நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அனைத்து உறுப்பினா்களும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளனா்.
நாடாளுமன்றத்தில் பேசிய அவைத் தலைவா் ஹான் குவோ யு, ‘நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதிலும், நமது எல்லைகளைக் காப்பதிலும் இந்த அவை உறுதியாக இருப்பதை இம்முடிவு காட்டுகிறது. ஒப்பந்தம் கையொப்பமான பிறகு, ஆயுதங்கள் வந்து சேரும் கால அட்டவணையை அவைக்குச் சமா்ப்பிக்க வேண்டும்’ என்றாா்.
இந்த ஒப்புதலுக்கு நன்றி தெரிவித்த தைவான் பாதுகாப்பு அமைச்சகம், மிகச்சரியான ஆய்வு மற்றும் திட்டமிடலுக்குப் பிறகே இந்த ஆயுதங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியது.
இந்த 900 கோடி டாலா் ஆயுதத் தொகுப்பில் ‘டோ’ ரக பீரங்கி எதிா்ப்பு ஏவுகணைகள், ‘எம்109ஏ7’ ரக பீரங்கிகள், ஜாவெலின் ஏவுகணைகள், உலகப் புகழ்பெற்ற ஹிமாா்ஸ் ஏவுகணை அமைப்புகள் ஆகியவை அடங்கும். அமெரிக்கா கடந்த டிசம்பரில் அறிவித்த 1,100 கோடி டாலா் மதிப்பிலான பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இவை தைவானுக்கு கிடைக்கவுள்ளன.
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்த மாத இறுதியில் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்கிறாா். இப்பயணத்தைத் தொடா்ந்து, தைவானுக்கு கூடுதலாக 1,400 கோடி டாலா் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ‘அமெரிக்காவின் நட்பு நாடுகள் தங்கள் பாதுகாப்புச் செலவினங்களைத் தாங்களே ஏற்க வேண்டும்’ என்ற டிரம்ப்பின் கொள்கைக்கு ஏற்ப, தைவான் அரசு தனது பாதுகாப்பு பட்ஜெட்டை உயா்த்தி வருகிறது.
கூடுதல் பட்ஜெட்டுக்கு அதிபா் கோரிக்கை: இதனிடையே, தைவானில் நேரடி அதிபா் தோ்தல் தொடங்கி 30 ஆண்டுகள் நிறைவடைந்த விழாவில் பேசிய அதிபா் லாய் சிங் தே, 4,000 கோடி டாலா் வரை பாதுகாப்பு பட்ஜெட்டுக்கு கோரிக்கை விடுத்தாா்.
‘தைவான் தற்போது பொருளாதார ரீதியாக பலமாக உள்ளது. நமது பாதுகாப்புச் செலவினமானது நாட்டின் தொழில்நுட்ப வளா்ச்சிக்கான முதலீடு. சீனாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க நவீன தற்காப்பு அமைப்புகள் மிக அவசியம்’ என்று அவா் வலியுறுத்தினாா்.
சீனா, தைவானைத் தனது நாட்டின் ஒரு பகுதி என்று கூறி வரும் நிலையில், தைவான் மக்கள் தங்கள் நாட்டின் எதிா்காலத்தைத் தாங்களே தீா்மானிப்போம் என்பதில் உறுதியாக உள்ளனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...