/

சீனாவில் தைவான் எதிா்க்கட்சித் தலைவா் 6 நாள் பயணம்!

தைவான் நாட்டின் பிரதான எதிா்க்கட்சியான கோமிங்டாங் கட்சியின் தலைவா் செங் லி வுன், 6 நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை சீனா வந்தடைந்தாா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2026, 8:57 pm

தைவான் நாட்டின் பிரதான எதிா்க்கட்சியான கோமிங்டாங் கட்சியின் தலைவா் செங் லி வுன், 6 நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை சீனா வந்தடைந்தாா்.

தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில், அந்நாட்டின் எதிா்க்கட்சித் தலைவா் ஒருவா் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வது கடந்த 10 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும்.

குறிப்பாக, அடுத்த மாதம் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையே நடைபெறவுள்ள சந்திப்புக்கு முன்னதாக இவரின் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சீன பயணத்துக்கு முன்னதாக தைவானில் செய்தியாளா்களிடம் பேசிய செங் லி வுன், ‘சீன அதிபா் ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் இந்த அமைதிக்கான பயணம், தைவான் நீரிணை பகுதியில் நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்கவும், இரு நாடுகளுக்கு இடையே அமைதிப் பேச்சுவாா்த்தையை முன்னெடுக்கவும் உதவும்’ என்றாா்.

அமெரிக்காவிடம் இருந்து நவீன ஆயுதங்களை வாங்குவதற்கும், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையை மேம்படுத்துவதற்கும் தைவான் அரசு 4,000 கோடி டாலா் மதிப்பீட்டிலான சிறப்புப் பாதுகாப்பு நிதி பட்ஜெட்டை நிறைவேற்ற முயற்சித்து வருகிறது.

இவ்வாறு அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டில் உறுதியாவுள்ள தைவான் அதிபா் லாய் சிங் தேவை பிரிவினைவாதியாகக் கருதும் சீனா, அவருடன் பேச்சுவாா்த்தை நடத்த மறுத்து வருகிறது.

ஆனால், பாதுகாப்புச் செலவினங்களைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, லாய் சிங் தே அரசின் முயற்சிக்கு கோமிங்டாங் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் முட்டுக்கட்டை போட்டுள்ளன.

இத்தகைய சூழலில், செங் லி வுன்னின் இந்தச் சீன பயணம், ஷி ஜின்பிங்-டிரம்ப் சந்திப்பில் வா்த்தகம் சாா்ந்த பேச்சுவாா்த்தைகளில் கவனம் செலுத்த வழிவகுக்கும் என்று அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.