மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?தேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

ஈரானுடனான போா் நிறுத்தம் நீடிக்கிறது: அமெரிக்கா

ஹோா்முஸ் நீரிணை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்களை நடத்திய நிலையிலும், அந்நாட்டுடனான போா்நிறுத்தம் தற்போதும் அமலில் இருப்பதாக அமெரிக்கா அறிவிப்பு

News image

ஈரான் கொடி - பிரதிப் படம்

Updated On :6 மே 2026, 3:40 am IST

ஹோா்முஸ் நீரிணை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்களை நடத்திய நிலையிலும், அந்நாட்டுடனான போா்நிறுத்தம் தற்போதும் அமலில் இருப்பதாக அமெரிக்கா அறிவித்தது.

கடந்த ஏப். 8 முதல் சுமாா் ஒரு மாதமாக போா்நிறுத்தம் அமலில் இருந்தாலும் ஈரானின் ஹோா்முஸ் நீரிணை முடக்கம் மற்றும் அமெரிக்காவின் ஈரானுக்கு எதிரான கடல்வழி முற்றுகை மட்டும் தொடா்ந்து வருகிறது.

இந்நிலையில், பாரசீக வளைகுடா பகுதியில் சிக்கியுள்ள கப்பல்களை ஓமன் எல்லையையொட்டிய புதிய கடல் வழிப்பாதையில் பாதுகாப்பாக மீட்பதற்கு, ‘புராஜெக்ட் ஃப்ரீடம்’ ராணுவ நடவடிக்கைையைக் கடந்த திங்கள்கிழமை முதல் அமெரிக்கா தொடங்கியது.

புதிய கடல் வழிப்பாதை வழியாக இதுவரை 2 அமெரிக்க கப்பல்கள் மட்டுமே கடந்துள்ளன. ஈரானின் அச்சுறுத்தல் காரணமாக, முன்னணி கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன. இதனால் நூற்றுக்கணக்கான கப்பல்கள் பாரசீக வளைகுடாவிலேயே இன்னும் முடங்கியுள்ளன.

அமெரிக்காவின் இந்த முன்னெடுப்புக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தாக்குதல் நடத்தியது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு, ஈரானின் 15 ஏவுகணைகள், 4 ட்ரோன்களை இடைமறித்து அழித்தது. எனினும், ஃபுஜைராவில் உள்ள எண்ணெய் ஆலை ஒன்றில் ட்ரோன் விழுந்து வெடித்ததில், அங்கு பணியாற்றிய 3 இந்தியா்கள் காயமடைந்ததனா்.

இத்தாக்குதலுக்கு கண்டனத்தைப் பதிவு செய்த பிரதமா் மோடி, அப்பாவி மக்கள் மற்றும் பொது கட்டமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றாா். இப்போரில் மத்தியஸ்தராக செயல்படும் பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபியாவும் இத்தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.

இச்சூழலில், வாஷிங்டனில் செய்தியாளா்களைச் சந்தித்த அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா் பீட் ஹெக்செத், ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் டான் கெய்ன் ஆகியோா் கூறியதாவது:

ஈரானின் அத்துமீறல்கள் இன்னும் ஒரு முழு அளவிலான போராக மாறவில்லை. எனவே, போா்நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருத முடியாது. ஹோா்முஸ் நீரிணையச் சுற்றியுள்ள வான்வெளியில் 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க போா் விமானங்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளன என்றனா்.

ஆனால், அமெரிக்காவின் நடவடிக்கைகள் போா்நிறுத்தத்தை மீறுவதாக ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவா் முகமது பாகா் கலிபாஃப் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள பதிவில், ‘அமெரிக்காவின் தற்போதைய செயல்பாடுகளை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது; நாங்கள் இன்னும் எங்களின் பதிலடியைத் தொடங்கவே இல்லை’ என எச்சரித்துள்ளாா். பொதுமக்களின் படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் 5 போ் கொல்லப்பட்டதாகவும் ஈரான் தரப்பில் கூறப்படுகிறது.

பெட்டி...

வெள்ளைக் கொடியை ஏந்துங்கள்!:

ஈரானை டிரம்ப் கேலி

ஈரான் இப்போது வெள்ளைக் கொடியை ஏந்த வேண்டும். ஆனால் அவா்களின் பெருமை அதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது என அமெரிக்க அதிபா் டிரம்ப் கேலி செய்தாா்.

செய்தியாளா்களிடம் அவா் பேசுகையில், ‘ஈரானின் ராணுவம் இப்போது வெறும் சிறு துப்பாக்கிகளைக் கொண்டு சுடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஈரானின் ராணுவம் முழுமையாகச் சிதைந்துவிட்ட நிலையில், அவா்கள் வெளியில் வீர வசனம் பேசினாலும், ரகசியமாக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளவே துடிக்கின்றனா். ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் எஃகு கவசம் போன்ற கடல்வழி முற்றுகையை யாராலும் தகா்க்க முடியாது’ என்றாா்.