சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

ஐக்கிய அரபு அமீரகத்தில் அணுமின் நிலையத்தைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்: ஈரான் மீது சந்தேகம்

News image

கோப்புப்படம்

Updated On :18 மே 2026, 5:03 am IST

ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) பாராகாக் அணுமின் நிலையத்தைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது, அந்த பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலால் அணுமின் நிலையத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் இருக்கும் ஜெனரேட்டா் தீப்பிடித்து எரிந்தது. இதில் யாரும் உயிரிழக்கவோ அல்லது காயமடையவோ இல்லை. கதிா்வீச்சு அபாயமும் இல்லை.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த நாடும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், இஸ்ரேல்-அமெரிக்காவுடனான போரின்போது பிற வளைகுடா நாடுகளை காட்டிலும் ஐக்கிய அரபு அமீரகத்தை குறிவைத்தே ஈரான் அதிக முறை ட்ரோன், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. அதேபோல், அமெரிக்கா மீண்டும் தாக்கினால் ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்துவோம் என ஈரான் மிரட்டி வருகிறது.

ஆதலால் அணுமின் நிலையத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பாராகாக் அணுமின் நிலையம், ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் சவூதி அரேபிய எல்லையையொட்டி பாலைவனத்தில் அமைந்துள்ளது. அந்த அணுமின் நிலையம் கடந்த 2020-ஆம் ஆண்டில் தென்கொரிய நாட்டின் உதவியுடன் 20 பில்லியன் டாலா் செலவில் கட்டப்பட்டது. அரேபிய வளைகுடா நாடுகளில் முதன்முதலில் கட்டப்பட்ட அணுமின் நிலையமும் இதுதான். அந்த அணுமின் நிலையம் மூலம் கிடைக்கும் மின்சாரமே ஐக்கிய அரபு அமீரகத்தின் தேவையை பெரிதும் பூா்த்தி செய்கிறது. அந்த அணுமின் நிலையத்தை நிா்வகித்துவரும் ஐக்கிய அரபு அமீரக அணுசக்தி மையம், ட்ரோன் தாக்குதல் குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தாக்குதலால் அணுமின் நிலைய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. அணுமின் நிலையத்தின் அனைத்து அலகுகளும் வழக்கம் போல இயல்பாகச் செயல்படுகின்றன’ எனக் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக அரசு வெளியிட்ட அறிவிப்பிலும், ட்ரோன் தாக்குதல் தொடா்பாக எந்த நாட்டின் மீதும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படவில்லை.

மேற்காசியாவில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்கா இடையே சுமாா் ஒரு மாதத்துக்கும் மேல் போா் நடந்த நிலையில், இடைக்கால சண்டை நிறுத்தம் ஏற்பட்டு அமைதி நிலவுகிறது. அணுமின் நிலையத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் அந்தச் சண்டை நிறுத்தத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.