
நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!
நேபாளத்தின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கௌரி குமார் யாதவ் ராஜிநாமா...

நேபாள வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கௌரி குமார் யாதவ் - பிரதமர் பாலேந்திர ஷா - கோப்புப் படம்
நேபாளத்தின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கௌரி குமார் யாதவ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள சமையல் எரிப்பொருள் தட்டுப்பாடு குறித்து நாடாளுமன்றக் குழு கூட்டத்தில், அரசுக்கு எதிராகவும் தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கு எதிராகவும் நேபாள வர்த்தகம், தொழில் மற்றும் விநியோகத்துறை அமைச்சர் கௌரி குமார் யாதவ் விமர்சனங்களை முன்வைத்தார்.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்களால் அங்கு சமையல் எரிப்பொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டு காத்மாண்டு பள்ளத்தாக்குப் பகுதியில் எரிபொருள் தட்டுப்பாடு உருவானதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, நடைபெற்ற நாடாளுமன்றக் குழு கூட்டத்தில், நாட்டிலுள்ள 58 தனியார் எரிவாயு நிறுவனங்கள் நேபாள அரசின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவில்லை எனக் குற்றஞ்சாட்டிய அமைச்சர் கௌரி குமார் அந்த நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்யப்போவதாகக் கூறினார்.
இதுபற்றி, அவர் பேசுகையில்,
“நமது நாட்டுக்கு 2 எரிவாயு நிறுவனங்களுக்கு மேல் தேவையில்லை. அதிகபட்சம் 2 நிறுவனங்களே போதுமானவை. மற்ற அனைத்து நிறுவனங்களின் உரிமங்களும் ரத்து செய்யப்பட வேண்டும்.
எரிவாயு விநியோகத்தை எளிமையாக்குங்கள் என அனைத்து நிறுவனங்களையும் அழைத்து நான் வேண்டுகோள் விடுத்தேன். ஆனால், எதுவும் வேலை செய்யவில்லை. நாங்கள் காத்மாண்டுவுக்கு 48,000 எரிவாயு சிலிண்டர்களை அனுப்பினோம்.
ஆனால், அங்கு 20,000 சிலிண்டர்களுக்கு மேல் சென்றடையவில்லை. மீதமுள்ளவை எங்கு சென்றன எனத் தெரியவில்லை. நாம் கேட்டாலும் அவர்கள் வழங்க மறுக்கின்றனர். நேபாள அரசின் எண்ணெய் நிறுவனம் 10 முறைக்கும் மேல் அவர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால், அவர்கள் ஒருமுறைகூட விநியோகம் செய்யவில்லை.
இந்த விவகாரத்தில், நேபாள எண்ணெய் நிறுவனத்துக்கோ அல்லது இந்த அரசுக்கோ சம்பந்தம் உள்ளதா?” எனக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் கௌரி குமார் யாதவ்வின் பேச்சு பெரும் அதிர்வலைகளை உருவாக்கிய நிலையில், அவர் இன்று (செப். 10) தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். மேலும், தனது ராஜிநாமா கடிதத்தை அவர் நேரடியாக நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவிடம் அளித்ததாகக் கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கடந்த மார்ச் மாதம் ஆட்சி அமைத்த பிரதமர் பாலேந்திர ஷாவின் அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்கள் ராஜிநாமா செய்துள்ளனர்.
இந்த நிலையில், தனியார் நிறுவனங்களைத் தவிர்த்து நேபாள அரசு சொந்தமாக எரிவாயு நிறுவனம் தொடங்க வேண்டுமென வலியுறுத்திய கௌரி குமார் யாதவ் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Nepal's Minister of Commerce and Industry, Gauri Kumar Yadav, has resigned from his post.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





