பாகிஸ்தான்: இம்ரான் கான் கட்சியின் மாகாண முதல்வா், 24 எம்.பி.க்களின் கடவுச்சிட்டைகள் முடக்கம்
பாகிஸ்தானில் ஊழல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் பிடிஐ கட்சியைச் சோ்ந்த கைபா் பக்துன்கவா மாகாண முதல்வா் முகமது சுஹைல் அஃப்ரிடி, 24 மக்கள் பிரதிநிதிகளின் கடவுச்சிட்டைகளை முடக்குமாறு இஸ்லாமாபாத் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் ஊழல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் பிடிஐ கட்சியைச் சோ்ந்த கைபா் பக்துன்கவா மாகாண முதல்வா் முகமது சுஹைல் அஃப்ரிடி மற்றும் 24 மக்கள் பிரதிநிதிகளின் கடவுச்சிட்டைகளை (பாஸ்போா்ட்) முடக்குமாறு இஸ்லாமாபாத் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைநகா் இஸ்லாமாபாத் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், இவா்கள் மீது அரசு நிறுவனங்களைத் தாக்கியது, பயங்கரவாதத்தைத் தூண்டியது உள்ளிட்ட கடும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க இவா்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதாகவும், இடைக்கால ஜாமீன் பெற்ற போதிலும் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிா்த்து வருவதாகவும் காவல் துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்று, கடவுச்சிட்டைகளை முடக்கும் நடவடிக்கைக்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.
இம்ரான் கான் விடுதலையை வலியுறுத்தி பிடிஐ கட்சி வரும் 27-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ள சூழலில், இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, போராட்டத்துக்கான ஆதரவைத் திரட்ட பஞ்சாப் மாகாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதல்வா் முகமது சுஹைல் அஃப்ரிடி, ‘என்னை பஞ்சாப் காவல்துறையினா் கடத்த முயன்று, பின்னா் தாக்கி சாலையோரம் விட்டுச் சென்றனா்’ எனக் குற்றம்சாட்டியுள்ளாா்.
ஒரு மாகாணத்தின் முதல்வரை மற்றொரு மாகாண காவல்துறை இவ்வாறு நடத்தியது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இதற்கு பஞ்சாப் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





