வெள்ளியன்று உத்தரப்பிரதேசம் கான்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி பேசும் போது அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் பிரியங்காவை, இந்திரா காந்தியுடன் ஒப்பிட்டு வாழ்த்தினர்.
அப்போது மக்களிடையே பேசத் துவங்கிய பிரியங்கா, ‘நான் இந்திரா இல்லை, அவரோடு ஒப்பிடுகையில் அவருக்கு முன் நான் ஒன்றுமே இல்லாதவளாகக் கூட இருக்கலாம், ஆனால், அவரை அடியொற்றி நானும் தேச சேவைக்கு அவர் அளித்த கடுமையான உழைப்பை அளிக்க ஒருபோதும் தவற மாட்டேன். இந்திராவின் மனதில் நிலைபெற்றிருந்த தேச சேவைக்கான ஆசையும், விருப்பமும் என் மனதிலும், என் சகோதரர் மனதிலும் நிலைபெற்றிருக்கிறது. எங்களிடமிருந்து அந்த உணர்வை எவராலும் அழித்து விட முடியாது. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நாங்கள் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து இந்த நாட்டுக்காக சேவை செய்து கொண்டே இருப்போம். என்ற வாசகங்களுடன் தனது பிரச்சாரத்தைத் துவக்கினார்.
தொடர்ந்து கான்பூரில் அவர் நடத்திய சாலைப்பிரச்சாரத்தில், கான்பூர் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வாலை ஆதரித்து திறந்தவெளி வாகனத்தில் அமர்ந்து பொதுமக்களிடையே வாக்குச் சேகரிப்பிலும் ஈடுபட்டார். அப்போது அவர் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் ஏழைகளுக்கு வருடா வருடம் 72,000 ரூபாய் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்ற வாக்குறுதி குறித்து ஆளும் பாஜகவினர், அதெல்லாம் சாத்தியமே இல்லை’ என்று பகடி செய்து வருகின்றனர். அப்படிச் சொல்பவர்களிடம் ஏழைகளுக்காகச் செலவிடத்தான் பணம் இல்லையே தவிர தொழிலதிபர்களுக்காகவும், மீடியா விளம்பரங்களுக்காகவும் செலவிட எப்போதுமே பணம் கொட்டிக் கிடக்கிறது. இது தான் இந்த நாட்டின் தலை எழுத்து என்றும் குறிப்பிட்டு பாஜக தலைமையை விமர்சித்தார்.
மோடியின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி எஸ் டி வரிவிதிப்பு எனும் இரு பிரம்மாஸ்திரங்கள் கடந்த ஆண்டுகளில் மக்களை மிக மிகத் துயரமான காலகட்டத்திற்குத் தள்ளின. அந்தத் துன்பங்களில் இருந்து இன்னும் கூட அவர்களில் பலர் மீண்டு வர முடியாத சூழலே இப்போதும் நிலவுகிறது. இப்படி ஒரு ஆட்சி மக்களுக்குத் தேவையா? அரசு நடத்துவதில் இரண்டு வகை உண்டு. ஒன்று மக்களுக்காக ஆட்சி நடத்துவது, அவர்கள் மக்கள் நலன்களை மட்டுமே முன்னெடுப்பார்கள், இரண்டாவது வகை தங்களையும் தங்களது கட்சியையும் பிரபலப்படுத்தி பப்ளிசிட்டி தேடிக் கொள்ள மட்டுமே அரசு நடத்துவது. அதைத்தான் தற்போது மோடி தலைமையிலான பாஜக செய்து வருகிறது.
மோடி ஒரு பலவீனமான தலைவர், அவரால் எப்போதுமே தனக்கு எதிர்ப்பாக வரக்கூடிய குரல்களை சகித்துக் கொள்ளவே முடிந்ததில்லை. மக்களே, இந்தத் தேர்தலில் உங்கள் முன் நிற்கும் இரு தலைமைகளையும் நன்கு உற்றுப் பாருங்கள், இருவரில் ஒருவர் எப்போதுமே எதிர்ப்புக் குரலை விரும்புவதே இல்லை, சகிப்பதும் இல்லை. ஆனால், ராகுல், எப்போதும் தன்னை நோக்கி வீசப்படும் விமர்சனங்களை சகித்துக் கொண்டு பதில் அளிக்கப் பழகியவர், இங்கு எதிர்கட்சிகள் எப்போதுமே ராகுலை நோக்கி அவரது அம்மா, சகோதரி, பாட்டி, தந்தை என அனைவரைப் பற்றிய விமர்சனங்களையும் அள்ளி வீசுகிறார்கள். அதற்காகவெல்லாம் அவர் மனம் நொந்து விடவில்லை. சகித்துக் கொண்டு அத்தனை விமர்சனத்திற்கும் பொறுமையாகப் பதில் சொல்லப் பழகி இருக்கிறார். குளிர்ந்த புன்னகையுடன் தன்னை நோக்கி வரும் விமர்சனக் கற்களை பொறுமையுடன் எதிர்கொள்ளும் ராகுலிடம் இருப்பது தான் அரசியல் மாண்பு, அரசியல் திடம். இது தானே ஒரு நல்ல தலைவருக்கு அத்யாவசியமானது.’ என்று நீள்கிறது ப்ரியங்காவின் காரசாரமான பிரச்சார உரை.
47 வயதாகும் பிரியங்காவின் பிரச்சார எல்லைகளுக்குள் மோடி போட்டியிடும் வாரணசியும், உத்தரப்பிரதேச இந்நாள் முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியிடும் கோரக்பூரும் அடங்கும். நிச்சயம் பிரியங்கா அவர்களையும் வறுத்தெடுக்கத் தயங்கமாட்டார் என்பதையே அவரது கான்பூர் உரை காட்டுகிறது.
ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலின் போதும் பிரியங்காவை அடுத்த இந்திரா காந்தியாகவும், அடுத்த பிரதமராகவும் ஆக்க நினைக்கும் காங்கிரஸ் அபிமானிகளின் கனவு புத்துயிர் பெறும். தேர்தலில் வென்றாலும் கூட அவர் பிரதமராக முடியுமோ இல்லையோ ஆனால் காங்கிரஸ்காரர்களின் கனவு மட்டும் ‘இந்திராவுக்கான மாற்று பிரியங்காவே’ எனும் கனவு மட்டும் தொடர்ந்து கனவாகவே நீடித்து வருகிறது.
மக்களே இப்போது நீங்கள் சொல்லுங்கள், பிரியங்காவிடம் உங்களில் எவருக்கேனும் அப்படியான நம்பிக்கையோ அல்லது எதிர்பார்ப்போ எப்போதாவது இருந்தது உண்டா? மறைந்த இந்திராவுக்கு பிரியங்கா மாற்றாகும் காலம் வருமா?
பிரியங்காவால்... இந்திரா ஆக முடியுமா?!
இந்தக் கேள்வியை பத்திரிகையாளர் பர்காதத் 2009 ஆம் ஆண்டு வாக்கில் ஒரு நேர்காணலின் போது பிரியங்காவிடம் முன் வைத்திருக்கிறார். அப்போது அவர் அளித்த பதில்;
என் 14 ஆவதுவயதிலேயே மக்கள் என்னை அடுத்த இந்திராவாக கொண்டாடத் தொடங்கி விட்டார்கள். அப்போது என்னைக் கண்ட மாத்திரத்தில் மலரும், கொண்டாடும் ஜனத்திரள் கண்டு அரசியல் தான் எனக்கு உகந்த இடம் என்று நான் கருதியிருந்தேன். ஆனால், 1999 ஆம் ஆண்டு தேர்தலின் போது என் மனம் மாறி விட்டது. அரசியல் எனக்கான இடமல்ல என்று நான் உணர்ந்தேன், தேச சேவையில் ஈடுபட வேண்டுமென்றால் அதற்கு அரசியலில் இறங்க வேண்டும் என்பதில்லை. வெளியில் இருந்து கொண்டும் மக்கள் சேவை செய்யலாம் என்று நான் முடிவு செய்தேன். ஏனென்றால் முதலில் நான் எடுத்த முடிவு, பிரியங்காவான நான், நானாக எடுத்த முடிவு அல்ல, மக்கள் என்னைக் கொண்டாடினார்கள், என்னை இந்திரா என்றார்கள், அதையே தொடர்ந்து கேட்க நேரும் போது எனக்கு குழப்பமாகி விட்டது, நான் யார்? உண்மையில் எனக்குள் இருக்கும் பிரியங்கா எதை விரும்புகிறார்? என்ற கேள்விகள் எல்லாம் எனக்குள் எழத் தொடங்கின. அப்போது என்னைச் சுற்றி நிகழ்ந்த மாற்றங்கள், இழப்புகள் என்னைப் பாதித்தன. வாழ்க்கையா? அரசியலா? எதற்கு முன்னுரிமை அளிப்பது எனும் இடைவிடாத மனப்போராட்டத்தின் பின் தொடர்ந்து விபாசனா பயிற்சியில் கலந்து கொண்டதன் பலனாக எனக்கு நேரடி அரசியல் வேண்டாம் என்ற தீர்மானமான முடிவுக்கு வந்தேன்’ என்று பர்காவுக்கு பதிலளித்துள்ளார் ப்ரியங்கா.
இந்த நேரடியான பதிலைப் பெற்ற பின்னும் பர்கா மீண்டும் அதே கேள்வியைச் சற்று மாற்றி ப்ரியங்காவிடம் கேட்கிறார்;
ஒருவேளை இப்போது அரசியலில் ஈடுபாடு இல்லையென்றாலும் ஒருவேளை நாளை குழந்தைகள் வளர்ந்த பின்னர் ஒருவேளை ப்ரியங்கா நேரடி அரசியலில் இறங்குவார் என நம்பலாமா? என்று கேள்வியெழுப்பினார். ஏனென்றால், இதுவரை ஒருமுறை கூட தேர்தலில் போட்டியிடாதவர் ப்ரியங்கா, அப்படி இருந்தும் ஒவ்வொரு பொதுத்தேர்தலின் போதும் அவரது அரசியல் பங்களிப்பு குறித்த கேள்விகள் அரசியல் களத்தில் முன் வைக்கப்படுகின்றன என்பதால்;
இதற்கு ப்ரியங்கா அளித்த பதில்;
‘ஒரு அம்மாவாக நான் எதிர்கொள்ளும் பிரச்னைகள் வேறு மாதிரியானவை. அப்படிப் பட்ட சூழலில் எதைப்பற்றியும் உறுதியாக ஒரு பதிலை இப்போதே என்னால் சொல்லி விடமுடியாது’ என்பதே;
இந்திய விடுதலைக்குப் பின் இந்தியா முதன்முதலாகச் சந்தித்த பொதுத்தேர்தலில் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலுமே காங்கிரஸுக்கு அபிரிமிதமான ஆதரவு இருந்தது. அந்த ஆதரவு அடுத்தடுத்த தேர்தல்களில் நசியத் தொடங்கியது. காரணம் இந்திரா முன்னெடுத்த எமர்ஜென்ஸி நடவடிக்கைகளால் மட்டும் அல்ல. காங்கிரஸ் எதிர்கொள்ள நேர்ந்த ஊழல் குற்றச்சாட்டுகளாலும் தான். மக்களுக்கு காங்கிரஸின் மீதான நம்பிக்கை குறையத் தொடங்கியது. மக்களிடம் காங்கிரஸ் இழந்து விட்ட நம்பிக்கையை ப்ரியங்காவைக் கொண்டு மீட்டெடுக்க நினைத்தது காங்கிரஸ் தலைமை. அந்த எதிர்பார்ப்பை 1999 ல் நிராகரித்தார் ப்ரியங்கா.
இனி வரும் தேர்தல் காலங்களிலேனும் அதற்கான வாய்ப்புகளுண்டா? என்பதை அறியும் முன்.
ப்ரியங்கா குறித்து இன்னும் சற்று அதிகத் தகவல்களை அறிந்து கொள்வோம் வாருங்கள்.
இதெல்லாம் ப்ரியங்கா குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்...
இந்த லிஸ்டில் இனி அடுத்ததாக பிரியங்கா இந்தியாவின் ஏதேனும் ஒரு மாநிலத்தின் ஏதேனும் ஒரு தொகுதியில் இந்திராவின் பேத்தியாகவும்... இந்தியாவின் மகளாகவும் வேட்பாளராக நின்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ராகுல் காந்தி அமேதியை விட்டு விட்டு கேரள வயநாட்டில் வந்து போட்டியிடுவார் என்று எதிர்பார்த்திருந்தோமா என்ன? அப்படித்தான் இதுவும். பிரியங்கா நேரடி அரசியலில் ஈடுபடலாம், படாமலும் போகலாம். ஆனால், ஒவ்வொரு தேர்தலிலும் பிரியங்காவை அடுத்த இந்திராவாக்கும் காங்கிரஸின் கனவுக்கு மட்டும் முடிவென்பதே இல்லை என்பது மட்டுமே இப்போதைய நிதர்சனம்.