கமலின் விஸ்வரூபம் திரைப்படத்தில் இடம்பெறும் ‘உனைக்காணாது நானும் நானில்லையே’ பாடலை அட்சர சுத்தம் அப்படியே பாடி அசத்தி கடந்த வாரம் முழுக்க இணைய வைரல் ஆனார் கேரளாவைச் சேர்ந்த ராகேஷ் உன்னி. உன்னியின் பாடலைக் கேட்டு அசலாக அந்தப் பாடலை விஸ்வரூபம் திரைப்படத்தில் பாடியவரான பாடகர் சங்கர் மகாதேவன், உன்னியின் குரலில் மயங்கி ‘இந்த நபரைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன், இவரோடு இணைந்து பணியாற்ற விரும்புகிறேன், இவரைப் பற்றித் தெரிந்தவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் என்று பகிரங்கமாக ட்விட்டரில் வேண்டுகோள் விடுக்கும் அளவுக்கு உன்னியின் புகழ் இந்தியாவெங்கும் பரவியது. படத்தின் நாயகன் கமல்ஹாசன் ஒரு படி மேலேறி உன்னியை நேரில் தன் வீட்டுக்கு வரவழைத்துப் பாரட்டி உச்சி முகர்ந்தார். ஒரு சாதாரண ரசிகராக இருந்தும் உன்னிக்கு புகழ் தேடித்தந்தது அவரிடமிருந்த திறமை. உன்னி இசை கற்றுக் கொண்டவரில்லை. கேள்வி ஞானத்திலேயே இந்த மனிதர் இத்தனை அருமையாகப் பாடுகிறாரே என்று நெட்டிஸன்களும் உன்னியைப் பாராட்டித் தீர்த்தனர். இது கடந்த வார பரபரப்பு.
கமல், ராகேஷ் உன்னியைச் சந்தித்துப் பாராட்டிய விடியோ...
இந்தப் பரபரப்பை மையமாக வைத்து தெலுங்கில் பிரபல நகைச்சுவை நடிகர் கம் நிகழ்ச்சித் தொகுப்பாளராக விளங்கும் பிதிரி சதி என்பவர் கமலின் சலங்கை ஒலி பரதநாட்டியப் பாடலை ஸ்பூஃப் செய்திருக்கிறார். அதில் அவர் கமலுக்கு ஒரு வேண்டுகோளும் விடுத்திருக்கிறார். அது என்னவென்றால், கமல் சார், கேரளாவைச் சேர்ந்த உன்னிக்கு மட்டும் தான் உங்கள் பாராட்டா? இதோ, ஆந்திராவைச் சேர்ந்த நான், உங்களது ‘சாகர சங்கமம்’ (சலங்கை ஒலி) திரைப்படத்தின் பரதநாட்டியப் பாடலை உங்களைப்போல ஆட முயற்சித்திருக்கிறேன். ஆடுவதோடு நான் பாடவும் செய்கிறேன். என் மீதும் உங்கள் பார்வை பட்டால் என்ன? உங்களோடு சேர்ந்து உங்கள் படத்தில் என்னையும் நாட்டியம் ஆட வைத்தால் அப்படியே பூ மழை தூவாதா என் மீது?! என்று கற்பனையில் ஆழ்ந்து போகிறார்.
பிதிரி சதி ஸ்பூஃப் விடியோ...
பிதிரி சதியின் இந்த காமெடி, கமல் பார்வையில் பட்டால் அவரென்ன செய்வாரோ?!