தந்தி தொலைக்காட்சியின் ராஜபாட்டை நிகழ்ச்சிக்காக சமீபத்தில் மனம் திறந்து நேர்காணலொன்றை அளித்திருந்தார் நடிகையும், காங்கிரஸ் பிரமுகருமான குஷ்பூ. அதில் பிரபுவுடனான அவரது நட்பு குறித்த கேள்வியும் கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்கு குஷ்பூவிடமிருந்து வந்த பதில் மழுப்பலாக இல்லாமல் அல்லது அதை ஏன் இப்போது கேட்டு சங்கடப் படுத்த வேண்டும் என்ற கோப உணர்வாகவும் இல்லாமல் மிக இயல்பான அழகியலாக இருந்தது.
90 களில் பிரபு, குஷ்பூ இணை இருந்தால் படம் நிச்சயம் வெற்றிப்படம் என இயக்குனர்கள் நினைத்தார்கள். இருவரும் இணைந்து தர்மத்தின் தலைவன் தொடங்கி வெற்றி விழா, சின்னத்தம்பி, பாண்டித்துரை, மை டியர் மார்த்தாண்டன், கிழக்குக்கரை, சின்ன வாத்தியார் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தனர். அவற்றில் சின்னத்தம்பி மெகா ஹிட் மட்டுமல்ல தெலுங்கு, இந்தி, என பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்ட பெஞ்ச் மார்க் திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது.
அந்தச் சமயத்தில் பிரபு, குஷ்பூவைக் காதலிப்பதாக ஊடகங்களில் கிசுகிசுக்கள் பரவின. இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகக் கூட வதந்திகள் முளைத்தவண்ணம் இருந்தன. இதனால் இந்த ஜோடி இணைந்து நடிப்பதில் தடை ஏற்பட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் குஷ்பூ அந்தக் காலகட்டத்தில் பிரபுவுடன் மட்டுமே தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்திருக்கவில்லை அவர் அன்றைய ஸ்டார் நடிகர்களான கார்த்திக், சத்யராஜ், அர்ஜூன், தெலுங்கின் முன்னணி நடிகர்கள், மலையாளத்திலும் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துக் கொண்டு தான் இருந்தார். ஆனால் பிரபுடன் மட்டும் ஏன் கிசுகிசுக்கப்பட்டார் என்றால் இருவருக்கும் இடையே நிஜமாகவே ஒரு அன்பு இருந்தது.
அதை குஷ்பூ தனது சமீபத்திய நேர்காணலில் தெளிவுபடுத்தியதோடு அதற்கொரு முற்றுப்புள்ளியும் வைத்திருக்கிறார்.
'ஆமாம், பிரபுடன் எனக்கொரு அழகான உறவு இருந்தது. அது மிக அழகான தருணம். அந்தத் தருணம் ஒரு சமயத்தில் முடிவுற்றது. அதற்குப் பிறகு சுந்தர் சி எனும் அழகான தருணம் என் வாழ்வில் மலர்ந்திருக்கிறது. இப்போது இது தான் நிஜம். குஷ்பூ, சுந்தர் சி உறவு தான் நிலையானது. இதை யாராலும் பிரிக்க முடியாது. பிரபுவுடனான நினைவுகளை இப்போது பகிர்ந்து பேரன், பேத்தி எடுத்து சந்தோஷமான மனநிலையிலிருக்கும் அவரை ஏன் சங்கடப் படுத்த வேண்டும். எனக்கும் 18 வயதில் மகளிருக்கிறார். எங்கள் வாழ்க்கையும் மிக அழகான தருணங்களால் நிறைந்திருக்கிறது. வாழ்வில் பல அழகான தருணங்கள் இருக்கின்றன. அந்த வகையில் பிரபுவுடனான நட்பும் அப்படியொரு தருணம் எனச் சொல்வேன். ஆனால் அது முடிந்து விட்டது.
சுந்தர் என்னை புரபோஸ் செய்யும் போதே திருமணத்தை மனதில் வைத்து தான் புரப்போஸ் செய்தார். அது எனக்குப் பிடித்திருந்ததால் நான் உடனே சம்மதித்தேன். ஆனாலும் எங்களது திருமணம் உடனே நடந்து விடவில்லை. ‘ஒரு நடிகையான உனக்கு செளகர்யமான வாழ்க்கைமுறை அமைத்துத் தரும் அளவுக்கு நான் எப்போது பொருளாதார வசதி அடைவேனோ அப்போது நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என சுந்தர் கூறியிருந்தார். அதன்படி 1999 ல் அவர் சொந்த வீடு கட்டினார். அவர் எதிர்பார்த்த பொருளாதார வசதிகளை எனக்கு ஏற்படுத்தித் தந்தார். உடனே அடுத்த வருடமே 2000 ல் எங்களது திருமணம் நடந்தது.'
- என்று தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் குஷ்பூ. இப்படி பழைய காதலாகட்டும், திருமணமாகட்டும், தனது குழந்தைப் பருவத்தின் சங்கடமான காலங்களாகட்டும் எதையும் மனம் திறந்து பேசுவதில் குஷ்பூவை யாராலும் மிஞ்ச முடியாது.
Image & concept courtesy : Thanthi t.v interview.
மூன்று முறை மணிரத்னம் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பைத் தவற விட்டு வருந்தும் நடிகை!
சீனாவில் ‘பாகுபலி 2’ எதிர்பார்த்த வசூலை அடையாதது ஏன்?
நான் ஆஸ்திகனும் இல்லை, நாஸ்திகனும் இல்லை! ஆனால் 'ஹாஸ்’திகன்! கமல் குறித்து மோகன் க்ரேஸி பேட்டி!
ரஜினி நடிக்க மறுத்த முதியவர் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்!