பெங்களூர், பிப். 27: குடிநீர், பேருந்து நிறுத்தம், கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகர் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பெங்களூரின் தென்பகுதியில் உள்ள ராஜராஜேஸ்வரி நகர் வார்டில் அழகிய பூங்காக்கள், கல்லூரிகள், கோயில்கள், அகலமான சாலைகள், நேர்த்தியான நடைபாதைகள் போன்ற வசதிகள் உள்ளன.
இங்குள்ள பூங்காக்கள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளன. சிறுவர் முதல் முதியோர் வரை பூங்காக்களில் நேரத்தை கழிக்க விரும்பும் அளவுக்கு பசுமைப்பகுதியாக விளங்குகிறது. இப்பகுதியில் புதிதாக மேம்படுத்தப்பட்ட இடங்கள், அகலமான சாலைகள், அழகிய தனிவீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், சாலைகளை பிரிக்கும் தடுப்புச்சுவர்கள் ஆகியவை அழகாக உள்ளன.
இதற்கு ஆதித்யா லேஅவுட் சிறந்த உதாரணம். ஆனால், இப்பகுதியின் தகுதியை குறைப்பதற்கான சில பிரச்னைகள் உள்ளன என்கிறார் சிவருத்ரா. அப்பகுதியில் வசிக்கும் இவர் மேலும் கூறுகையில், எங்கள் பகுதியில் காவிரி குடிநீர் கிடைப்பதில்லை. எனவே, ஆழ்துளைக்கிணறுகளை நம்பியிருக்க வேண்டியிருக்கிறது என்றார்.
இதேபகுதியை சேர்ந்த கீர்த்தி, குடிநீர் பிரச்னை ஒருபுறம் இருக்க பேருந்து நிறுத்தங்கள், கழிவுநீர் கால்வாய் இல்லை என்றார். பேருந்து நிறுத்தங்களுக்கு நெடுந்தூரம் செல்ல வேண்டியுள்ளது. கழிவுநீர் கால்வாய் இல்லாததால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
சாலைகளில் கழிவுநீர் ஓடுகிறது. இதுபற்றி கவுன்சிலர் ஜி.எச்.ராமசந்திராவிடம் பலமுறை முறையிட்டும் பலனில்லை என்றார் கீர்த்தி. இங்குள்ள டபுள்ரோடு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குப்பைக் கூளங்கள் நிரம்பியுள்ளது என்றார் டாக்டர்.பட்டாச்சார்யா.
இப்பிரச்னைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் தீர்வுகாண வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.