கன்னடத்தில் மொழியாக்கம் பெறும் தமிழ் சங்க இலக்கியங்கள்

பெங்களூர், ஜன. 27: எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற சங்க இலக்கியப் பாடல்கள் கன்னடத்தில் மொழியாக்கம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. தமிழ் மொழியின் தொன்மை மற்றும் பழைமையை வெளிப்படுத்தும் ஆற்றல்வாய்ந்த இலக
Updated on
1 min read

பெங்களூர், ஜன. 27: எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற சங்க இலக்கியப் பாடல்கள் கன்னடத்தில் மொழியாக்கம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.

தமிழ் மொழியின் தொன்மை மற்றும் பழைமையை வெளிப்படுத்தும் ஆற்றல்வாய்ந்த இலக்கியக் கருவியாக கருதப்படுவது சங்க இலக்கியங்கள்.

நக்கீரர், கபிலர் முதலான 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது சங்க இலக்கியம். இப்புலவர்களுள் பெண்களும், நாடாளும் மன்னரும் அடங்குவர்.

பண்டைத் தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன. சங்க இலக்கியங்களை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பெரும் பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

எல்லா இலக்கிய வளமும் தமிழுக்கும், தமிழின் இலக்கியவளம் பிறமொழிகளிலும் மொழியாக்கம் பெற வேண்டுமென்ற பாரதியின் கனவை நனவாக்கும் வகையில்,  எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு பாடல்கள் கன்னடத்தில் மொழியாக்கம் செய்யப்படுகின்றன.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதியுதவியுடன் பெங்களூர் தமிழ்ச் சங்கம் மேற்கொண்டிருக்கும் இப்பணி வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. இப்பணியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.சீனிவாசன் தலைமையில் 8 பேர் கொண்ட மொழியாக்கக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் பேராசிரியர்கள் பொன்.கா.சுப்பிரமணியன், சங்கரி, தா.கிருட்டிணமூர்த்தி, ந.கிருட்டிணமூர்த்தி, கன்னடப் பேராசிரியர்கள் செ.ராமசாமி, மலர்விழி, ரமேஷ் சந்திரதத், கன்னட பண்பாட்டுத் துறையில் பணியாற்றிய சத்தியநாராயணன் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இதுபற்றி இதன் ஒருங்கிணைப்பாளர் இரா. சீனிவாசன், தினமணி நிருபரிடம் கூறுகையில், பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் நீண்டநாள் கனவு இதன் மூலம் நிறைவேற தொடங்கியுள்ளது. தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் கன்னடத்தில் கொண்டுவர தமிழ்ச் சங்கம் நீண்டகால திட்டம் வகுத்துள்ளது. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய எட்டுத்தொகையில் 2341 பாடல்கள்  திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்துப்பாட்டில் 3552 பாடல்கள் அடங்கிய மொத்தம் 33,500 வரிகளை தமிழில் இருந்து கன்னடத்துக்கு மொழியாக்கம் செய்யவிருக்கிறோம். இப்பணி 2 ஆண்டுகளில் முடிவடையும்.

2013-ம் ஆண்டில் கன்னட மொழியாக்க சங்க இலக்கியம் நூலாக வெளியிடப்படும். தமிழ்ப் பாடல்களின் கன்னட வரிவடிவம், கன்னட மொழியாக்கம், துறைவிளக்கம், விளக்கவுரை, கருத்துரை ஆகிய பகுதிகள் இதில் அடங்கியுள்ளன.

இப்பணிகள் முடிவடைந்ததும், சிலப்பதிகாரம், மணிமேகலை காவியங்கள் மற்றும் பதிù னண்கீழ்க்கணக்கு நூல்கள் கன்னடத்துக்கு மொழியாக்கம் செய்யப்படும். இதற்காக பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் தனது கிளையைத் தொடங்க செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com