ஆட்சிக் கவிழ்ப்பு நாடகத்திற்கு இடைக்காலத் திரை

பெங்களூர், மே 14: கர்நாடகத்தில் பாஜக ஆட்சியைக் கவிழ்ப்பதாகக் கூறி, கடந்த 3 நாள்களாக நடைபெற்ற அரசியல் நாடகத்திற்கு எடியூரப்பா இடைக்காலத் திரை போட்டுள்ளார். சட்டவிரோத சுரங்கத் தொழில் தொடர்பாக லோக் ஆயுக்
Updated on
1 min read

பெங்களூர், மே 14: கர்நாடகத்தில் பாஜக ஆட்சியைக் கவிழ்ப்பதாகக் கூறி, கடந்த 3 நாள்களாக நடைபெற்ற அரசியல் நாடகத்திற்கு எடியூரப்பா இடைக்காலத் திரை போட்டுள்ளார்.

சட்டவிரோத சுரங்கத் தொழில் தொடர்பாக லோக் ஆயுக்த முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே அளித்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டிருந்ததால் முதல்வர் பதவியை இழந்த எடியூரப்பா, தனது விசுவாசியான சதானந்த கெüடாவை முதல்வர் பதவியில் அமர்த்தினார்.

சந்தோஷ் ஹெக்டேவின் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டால், எடியூரப்பாவுக்கு மீண்டும் முதல்வர் பதவி வழங்குவதாக பாஜக மேலிடம் உத்தரவாதம் அளித்திருந்தது. இதனிடையே, சட்டவிரோத சுரங்கத் தொழில் குற்றச்சாட்டில் இருந்து எடியூரப்பாவை விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால், உற்சாகம் அடைந்த எடியூரப்பா, மீண்டும் முதல்வராகும் கனவில் பாஜக மேலிடக் கதவைத் தட்டினார். எடியூரப்பாவுக்கு ஆதரவு தராத பாஜக மேலிடம், மீதமுள்ள பதவிக் காலத்தில் சதானந்த கெüடாவே முதல்வராகத் தொடர்வார் என்று அறிவித்தது.

இதையடுத்து, சதானந்த கெüடா மீது வசைமாரி பொழிந்த எடியூரப்பா, அவருக்கு எதிராக தனது ஆதரவு அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை தூண்டியதோடு, பட்ஜெட்டை தாக்கல் செய்யவிடாமல் முட்டுக்கட்டைப் போட்டார்.

இதுகுறித்து கடந்த மார்ச் மாதம் பாஜக தேசியத் தலைவர் நிதின் கட்கரிக்கு சதானந்த கெüடாவும், ஈஸ்வரப்பாவும் கூட்டாகக் கடிதம் எழுதினர். எடியூரப்பா ஆதரவு அமைச்சர்களை அந்தக் கடிதத்தில் சாடியுள்ள சதானந்த கெüடா, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியிருந்தார்.

இந்தக் கடிதத்தின் நகல் அண்மையில் பத்திரிகைகளில் வெளியானது. இதை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திய எடியூரப்பா, சதானந்த கெüடாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்க அரசியல் நகர்வுகளை மேற்கொண்டார்.

சிபிஐ வலையில் இருந்து விடுபட காங்கிரஸ் பக்கம் சாயக் காத்திருந்த எடியூரப்பாவை சில மடாதிபதிகள் மூலம் பாஜக தடுத்து நிறுத்தியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். மூலம் லிங்காயத்து மடங்களைத் தொடர்பு கொண்ட பாஜக மேலிடம், எடியூரப்பாவின் அரசியல் திட்டங்களை சுக்குநூறாக்கியது.

பாஜக ஆட்சிக் கவிழ்ப்பு நாடகத்தை நடத்தினால், கட்சி ஒழுங்கை சுட்டிக்காட்டி தன்னையும், தன் ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து மேலிடம் நீக்கும், அதனால் உருவாகும் அனுதாப அலையைப் பயன்படுத்தி தனிக் கட்சி தொடங்கியோ, காங்கிரஸ் கட்சியில் இணைந்தோ தன் அரசியல் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்ளத் திட்டமிட்டிருந்த எடியூரப்பாவின் கனவை அருண் ஜேட்லி லாவகமாக கலைத்துள்ளார்.

மடங்களை நம்பி அரசியல் நகர்வுகளை மேற்கொள்ளும் எடியூரப்பாவின் பலவீனத்தைச் சரியாகக் கையாண்டு, அவரின் அதிரடி முடிவுகளை புஸ்வானமாக்கியுள்ளார் அருண் ஜேட்லி.

கர்நாடகத்தில் அடுத்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலை மையப்படுத்தி, எடியூரப்பா மேற்கொண்ட அரசியல் நாடகத்திற்கு அவரே இடைக்காலத் திரை போட்டுள்ளார். பாஜகவைவிட்டு விலகும் முடிவை தற்போதைக்கு தள்ளிப்போடுவதாக எடியூரப்பா அறிவித்துள்ளது, சட்டப்பேரவைத் தேர்தல் கனவில் இருந்த எதிர்க்கட்சிகளை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com