பிரதமர் நரேந்திர மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததாக கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி குற்றஞ்சாட்டினார்.
இதுகுறித்து புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
பழைய உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் கடந்தாண்டு நவ.8-ஆம் தேதி இரவு முதல் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனால், விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
கள்ள ரூபாய் நோட்டுகளை வெளியே கொண்டு வரவும், நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக பிரதமர் தெரிவித்தார். அவர், அறிவித்தபடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாடு எந்த வளர்ச்சியையும் அடையவில்லை. மாறாக, நாட்டின் பொருளாதாரம்தான் வீழ்ச்சி அடைந்துள்ளது.
புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கவும் பல கோடி செலவு செய்ய நேரிட்டது. இந்த நாளை காங்கிரஸ் கருப்பு தினமாக அனுசரித்துள்ளது. பாஜக, காங்கிரஸ் கட்சிகளால் நாட்டுக்கு தொடர்ந்து பின்னடைவுதான் ஏற்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக, நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபடவில்லை.
இந்த நிலையில், 2025-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை 3 மடங்காக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளது நகைப்புக்குரியது என்றார் குமாரசாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.