மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்

பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும்
Updated on
1 min read

பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும், கர்நாடக காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளருமான கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.
கடந்தாண்டு நவ.8-ஆம் தேதி ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனால், பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். இந்த நடவடிக்கை அமல்படுத்தி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், புதன்கிழமையை (நவ.8) கர்நாடக காங்கிரஸ் கருப்பு தினமாக அனுசரித்தது.
பெங்களூரு ஆனந்த்ராவ் சதுக்கத்தில் புதன்கிழமை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம், சுதந்திரப்பூங்கா வரை கண்டன ஊர்வலமும் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் கே.சி.வேணுகோபால், முதல்வர் சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வர், செயல்தலைவர் தினேஷ்குண்டுராவ், பொதுச்செயலாளர் பி.எல்.சங்கர், அமைச்சர்கள் கிருஷ்ணபைரேகெளடா, எம்.கிருஷ்ணப்பா, ராமலிங்க ரெட்டி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.
சுதந்திரப் பூங்காவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று கே.சி.வேணுகோபால் பேசியது:
பிரதமர் மோடியின் தன்னிச்சையான பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியாவின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பிரதமர் மோடிதான் பொறுப்பேற்க வேண்டும். பண மதிப்பிழப்பு  நடவடிக்கை ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் பாதித்துள்ளது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கண்டித்து நாட்டு மக்கள், அரசியல் கட்சியினர் கொந்தளித்துள்ள நிலையில், அந்த நடவடிக்கையை பாஜகவினர் பெரிய சாதனையாகக் கொண்டாடி வருகிறார்கள். பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கருப்பு பணத்திற்கு எதிரான தாக்குதல் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.  ஆனால், வெளிநாடுகளில் பதுக்கிவைத்துள்ள கருப்பு பணம் இன்னும் மீட்கவில்லை.  இதேபோல, பயங்கரவாதச் செயல்களும் குறையவில்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் சாதாரண மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
கையிருப்பில் இருந்த உயர் மதிப்பு செலாவணிகளைப் பெறுவதற்காக மக்கள் வங்கி முன் காத்திருந்தனர். இதில் 200-க்கும் அதிகமானோர் இறந்துவிட்டனர். இந்த இன்னல்களை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.
கர்நாடக காங்கிரஸ் செயல்தலைவர் தினேஷ் குண்டுராவ் பேசியது: பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணத்தையும், பயங்கரவாதச் செயல்களையும் ஒழித்துவிடுவதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். ஆனால், அவர் உறுதி அளித்தபடி எதுவும் நடக்கவில்லை. ரூ.15.44 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.1000, ரூ.500 நோட்டுகள் மதிப்பிழக்கப்பட்டன. இதில் 99 சதம் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வந்துள்ளது.
நமது நாட்டின் மொத்த உற்பத்தி பொருள் விகிதம் (ஜிடிபி) 2 சதம் சரிந்துள்ளது. இதனால் இந்திய பொருளாதாரம் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சி நீடித்தால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com