கர்நாடகத்தில் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்றுத் தருவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக அந்த மாநில சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா தெரிவித்தார்.
கர்நாடக சட்ட மேலவையில் புதன்கிழமை கேள்விநேரத்தின் போது பாஜக உறுப்பினர் கணேஷ் கார்னிக் எழுப்பிய கேள்விக்கு தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சந்தோஷ்லாடின் சார்பில் பதிலளித்து அவர் கூறியது:
கர்நாடகத்தில் செயல்பட்டுவரும் தனியார் நிறுவனங்களில் உள்ள 'சி','டி' நிலை பணியிடங்களை 100 சதவீதம் கன்னடர்களுக்கு வழங்கப்படும் என்று 2017-18-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தத் திட்டம் குறித்து அரசு தலைமை வழக்குரைஞரின் ஆலோசனை பெறப்பட்டுள்ளது. அவரது கருத்தின் அடிப்படையில் தனியார் நிறுவனங்களில் 'சி','டி'நிலை பணியிடங்களில் 100 சதவீதம் கன்னடர்களுக்கு பெற்றுத் தருவது தொடர்பாக எடுக்க வேண்டிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இது சாத்தியமா? என்பது குறித்தும் பரிசீலித்துவருகிறது. கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் 100 சதவீதம் ஒதுக்கலாம் என்று கருத்து பெறப்பட்டால், அதன்பிறகு கர்நாடக தொழில் வேலைவாய்ப்புச் சட்டம்,1961-இல் திருத்தம் கொண்டுவருவது குறித்து முடிவெடுக்கப்படும்.
இந்த விவகாரத்தில் தெளிவான பார்வை கிடைத்தவுடன் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு 100 சத இடஒதுக்கீடு செய்வது குறித்து ஆராயப்படும் என்றார்.
பொதுத் தேர்வு: மாணவர்களுக்கு உதவ தொலைபேசி மையம்
பெங்களூரு, பிப்.21: எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு குறித்த மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக தொலைபேசி உதவி மையத்தை கர்நாடக உயர்நிலைக் கல்வி தேர்வு வாரியம்(கே.எஸ்.இ.இ.பி.) திறந்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக உயர் நிலைக் கல்வி தேர்வு வாரியம்(கே.எஸ்.இ.இ.பி.)வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2017-18-ஆம் கல்வி ஆண்டில் எஸ்எஸ்எல்சி படித்துவரும் மாணவர்களுக்கு, 2018 மார்ச் 23-ஆம் தேதி பொதுத்தேர்வு நடக்கவிருக்கிறது. பொதுத்தேர்வு குறித்த மாணவர்களின் சந்தேகங்களை களைவதற்காக தொலைபேசி உதவிமையம் திறக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் அனைவரும் 080-23310075, 23310076 என்ற தொலைபேசி எண்ணில் அழைத்து சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். தொலைபேசி உதவிமையம் பிப்.23 முதல் செயல்பட தொடங்கவுள்ளது.
அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்று பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் நெருக்கடி கொடுப்பதால்,அது மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடுகிறது.
இதனால் படிக்க வேண்டிய நேரத்தை மாணவர்கள் வீணடித்து வருவதோடு, தன்னம்பிக்கையையும் இழந்துவிடுகிறார்கள். இதன்காரணமாக தேர்வை சீராக எழுதமுடியாமல் மாணவர்கள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை போக்கி, மாணவர்களின் தேர்வு எழுதும் திறனை மேம்படுத்துவதற்காக ஆலோசனைகளை உதவிமையத்தில் வழங்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
வல்லுநர் குழு அமைந்துள்ள உதவிமையம் பிப்.21 முதல் மார்ச் 22-ஆம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரையும், மார்ச் 23-ஆம் தேதி முதல் ஏப்.6-ஆம் தேதிவரை தினமும் காலை 9 மணி முதல் நண்பகல் 2.30 மணிவரையும் செயல்படுகிறது.
தேர்வை எதிர்கொள்வது, வினாத்தாள் மாதிரி, கற்கும் திறன் மேம்பாடு, தேர்வு அச்சம், நேரமேலாண்மை, மனநலம்சார்ந்த பிரச்னைகள் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வுவழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.