சாமுண்டீஸ்வரி, பாதாமி தொகுதிகளில் சித்தராமையா தோற்கடிக்கப்படுவார் என்று கர்நாடக பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.
கலபுர்கியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: முதல்வர் சித்தராமையாவுக்கு தோல்வி பயம் அதிகரித்துள்ளது. இதனால்தான் சாமுண்டீஸ்வரி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு பாதாமி தொகுதியிலும் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். வெற்றி மீது நம்பிக்கை இருந்திருந்தால், சாமுண்டீஸ்வரி தொகுதியில் மட்டுமே அவர் போட்டியிட்டிருப்பார்.
2 தொகுதிகளிலும் சித்தராமையா தோல்வியடைவது உறுதியாகியுள்ளது. கர்நாடகத்தில் மராத்தி மொழி பேச முடியவில்லை என சித்தராமையா வருத்தம் தெரிவித்ததன் மூலம் கன்னடர்கள் மீதும், கன்னட மொழியின் மீதும் அவருக்கு உள்ள பற்று தெளிவாகிறது.
பாஜக வேட்பாளர் ஸ்ரீராமுலுவுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி பிரசாரம் செய்வதை எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஜனார்த்தன ரெட்டி தற்போது பாஜகவில் இல்லை. அவர் ஸ்ரீராமுலுவின் நீண்டநாள் நெருங்கிய நண்பர் என்பதால், அவருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனை அரசியல் ஆதாயத்துக்காக எதிர்க்கட்சியினர் பெரிதாக்கி வருகின்றனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.