
பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ஏராளமான தமிழர்கள் கண்ணீர் மல்க மலரஞ்சலி செலுத்தினர்.
பெங்களூரு தமிழ்ச் சங்கம் சார்பில் பெங்களூரு அல்சூரில் உள்ள சங்க வளாகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் அரங்கத்தில் புதன்கிழமை தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன், துணைத் தலைவர் கோ.தாமோதரன், செயலாளர் இராமசுப்ரமணியன், துணைச் செயலாளர்கள் அமுதபாண்டியன், இல.பழனி, செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், பழனிச்சாமி, மு.சம்பத், சங்க உறுப்பினர்கள் சிவராமன், அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவர் மு.மீனாட்சிசுந்தரம், கர்நாடக மாநில திராவிடர் கழகத்தலைவர் மு.ஜானகிராமன், கர்நாடகத் தமிழர் இயக்க அமைப்பாளர், தமிழர் முழக்க திங்களிதழ் ஆசிரியர் வேதகுமார், உலகச் சிந்தனையாளர் மன்றம், தார்வாட் மாவட்டத் தமிழ்ச் சங்கத் தலைவர் ஊப்ளி அ.தனஞ்செயன் உள்ளிட்ட ஏராளமானோர் மு.கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர்தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது, பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன் கூறுகையில், "இந்தியா கண்ட தலை சிறந்த தலைவர் கருணாநிதி. பிறவிப் போராளியாக வாய்த்ததால், இளம் வயதில் இருந்தே போராட்டக் களத்தையே தனது வாழ்க்கையாகக் கொண்டவர். 80 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் இந்தியத் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.
ஹிந்தி எதிர்ப்பு, இட ஒதுக்கீடு போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட போதும், வட இந்தியத் தலைவர்களால் பெரிதும் போற்றப்பட்டவர். கருணாநிதியின் அரசியல், நிர்வாகம், தமிழ், இலக்கிய ஆளுமையை அவரது அரசியல் எதிரிகளும் ஏற்றுக் கொள்வார்கள்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா வழியில் சமூக நீதி, மொழி உரிமை, ஹிந்தி எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு போன்ற அடிப்படைக் கொள்கைகளில் இருந்து பிறழாதவர். இந்திய அரசியல் வானில் தன்னிகரில்லா தலைவராக உயர்ந்து நின்று உலா வந்தவர். உலகத் தமிழர்களின் நல்வாழ்வில் அக்கறை காட்டி உழைத்தவர். தனது எழுத்தாற்றல், பேச்சாற்றல், இலக்கிய ஆற்றலால் தமிழர்களைக் கட்டிப் போட்டவர். தமிழ்மொழியின் பாதுகாப்பிலும், வளர்ச்சியிலும் தளராத ஆர்வம் கொண்டிருந்தவர்.
பெங்களூரில் 18 ஆண்டு காலம் மூடப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையை திறந்துவைக்க கருணாநிதி பெரிதும் பாடுபட்டார். காவிரிப் பிரச்னையிலும் கர்நாடகத் தமிழர்களின் நலனுக்கு ஊறு ஏற்படாதவாறு கர்நாடக அரசுடன் பேசி தண்ணீர் பெற்று
வந்தவர்.
இப்படி பல சிறப்புக்குச் சொந்தக்காரரான கருணாநிதியின் மறைவு கர்நாடகத் தமிழர்களுக்கும், பெங்களூரு தமிழ்ச் சங்கத்துக்கும் பேரிழப்பாகும். கருணாநிதிக்கு தமிழ்ச் சங்கம் சார்பில் வீரவணக்கம் செலுத்துகிறோம்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






