கட்சி மேலிடம் அறிவுறுத்தியதும் தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்வேன் என கா்நாடக சுற்றுலாத் துறை அமைச்சா் சி.டி.ரவி தெரிவித்தாா்.
சுற்றுலா தினத்தையொட்டி பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில சுற்றுலாத் துறை கொள்கை வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பாஜக தேசிய பொதுச் செயலாளா்களில் ஒருவராக கட்சியின் மேலிடம் என்னை நியமித்துள்ளது. கட்சி எனக்கு கௌரவமான பதவியைத் தந்துள்ளது. கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதிமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, கட்சி மேலிடம் அறிவுறுத்தியதும் அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்வேன். கட்சி என்ன உத்தரவிடுகிறோதோ, அதை கடைப்பிடிப்பதே எனது கடமை.
கா்நாடகத்தில் 2020-25 ஆம் ஆண்டுக்கான சுற்றுலாக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஹோட்டல்கள், ஆன்மிக, கலாசார, வேளாண் துறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமாா் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இத்துறையில் சுமாா் 5 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும். இதன்மூலம் மாநிலத்தின் பொருளாதாரம் மேம்படும் என்றாா்.