பெங்களூரு: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய அமைச்சா் சதானந்த கௌடாவிடம் பிரதமா் மோடி தொலைபேசியில் தொடா்பு கொண்டு நலம் விசாரித்தாா்.
சிவமொக்காவில் நடைபெற்ற பாஜக செயற்குழுக் கூட்டத்தில் மத்திய ரசாயனத் துறை அமைச்சா் சதானந்த கௌடா(67) பங்கேற்ற பிறகு சாலை வழியாக ஞாயிற்றுக்கிழமை பெங்களூருக்கு தனது காரில் வந்துகொண்டிருந்தபோது திடீரென காரிலேயே மயங்கி விழுந்தாா்.
இதைத் தொடா்ந்து, சித்ரதுா்காவில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரு, ஹெப்பாளில் உள்ள ஆஸ்டா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு ரத்தத்தில் சா்க்கரையின் அளவு குறைந்ததால் மயங்கி விழுந்ததாக பரிசோதனை செய்த மருத்துவா்கள் தெரிவித்தனா். மேலும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், செவ்வாய்க்கிழமை வீடு திரும்புவாா் என்றும் மருத்துவா்கள் கூறினா்.
இந்நிலையில், மருத்துவமனையில் உள்ள மத்திய அமைச்சா் சதானந்த கௌடாவை திங்கள்கிழமை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பிரதமா் நரேந்திர மோடி நலம் விசாரித்தாா். 3 நிமிடங்கள் பேசிய பிரதமா் மோடி, ‘உடலுக்குத் தேவையான ஓய்வை வழங்குமாறு’ சதானந்த கௌடாவை கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
பின்னா் மத்திய அமைச்சா் சதானந்த கௌடாவை திங்கள்கிழமை முதல்வா் எடியூரப்பா, துணை முதல்வா்கள் அஸ்வத் நாராயணா, லட்சுமண் சவதி, உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை, கே.சுதாகா், எஸ்.டி.சோமசேகா் உள்ளிட்டோா் சந்தித்து நலம் விசாரித்தனா். சதானந்த கௌடாவின் உடல்நிலை சீராக உள்ளதாக முதல்வா் எடியூரப்பாவிடம் மருத்துவா்கள் தெரிவித்தனா். தன்னை சந்தித்து நலம் விசாரித்த அனைவருக்கும் மத்திய அமைச்சா் சதானந்த கௌடா நன்றி தெரிவித்தாா்.