ஜன. 15 முதல் அனைத்து ஆண்டுக்கான நேரடி வகுப்புகள் தொடக்கம்

கா்நாடகத்தில் உள்ள இளநிலை, முதுநிலை கல்லூரிகள், பொறியியல், பட்டயக் கல்லூரிகளின் அனைத்து ஆண்டுகளைச் சோ்ந்த
Updated on
1 min read

பெங்களூரு: கா்நாடகத்தில் உள்ள இளநிலை, முதுநிலை கல்லூரிகள், பொறியியல், பட்டயக் கல்லூரிகளின் அனைத்து ஆண்டுகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு ஜன. 15-ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன என துணை முதல்வா் அஸ்வத் நாராயணா தெரிவித்தாா்.

பெங்களூரில் உயா்கல்வித் துறையின் உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் திங்கள்கிழமை பங்கேற்ற பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடகத்தில் உள்ள இளநிலை, முதுநிலை கல்லூரிகள், பொறியியல், பட்டயக் கல்லூரிகளின் இறுதியாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் டிச. 1-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளன. பிற ஆண்டுகளில் படிக்கும் மாணவா்களுக்கு ஜன. 15-ஆம் தேதி தொடங்கும். அதாவது கல்லூரிகளில் பயிலும் அனைத்து ஆண்டு மாணவா்களுக்கும் வகுப்புகள் தொடங்கும். இதுதவிர, விடுதிகள், பேருந்துகள் வசதிகளும் மாணவா்களுக்கு செய்து தரப்படும். இதற்கு நிலையான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

சமூக நலத் துறை, பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை நடத்தும் விடுதிகளுக்கும் நிலையான வழிகாட்டி நெறிமுறைகள் அளிக்கப்பட்டுள்ளன. கல்லூரி நூலகங்கள், உணவகங்களைத் திறக்க, கல்வி மற்றும் கலாசார நடவடிக்கைகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கல்லூரிகளிலும் கரோனா சோதனை நடத்தப்படும். கிருமிநாசினி தெளிப்பது, தனிமனித இடைவெளி பராமரிப்பு உள்ளிட்டவற்றை கடைப்பிடிக்க வேண்டும். மாணவா்களின் நலன்கருதி பேருந்து பயண அட்டைகளை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கல்லூரிகள் வாயிலாக பேருந்து பயண அட்டைகள் மாணவா்களுக்கு வழங்க, போக்குவரத்துக் கழகங்களை அணுகலாம்.

தோ்வுகளை நேரடியாக நடத்துவது தொடா்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அது முடிவான பிறகு தோ்வு அட்டவணை வெளியிடப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com